மோட் கி மஸ்ஜித் அல்லது மஸ்ஜித் மோட் எனப்படும் இந்த மசூதியின் பெயருக்கு ‘பயிறு மாளிகை’ என்பது பொருளாகும். இந்த பெயரின் விசித்திரத்தை புரிந்துகொள்ள கொஞ்சம் வரலாற்று தகவல்கள் தேவை. அதாவது டெல்லி சுல்தான் சிக்கந்தர் மோடியின் ஆட்சியில் பிரதம மந்திரியாக இருந்த வாசிர் மியா போயியா என்பவரால் இந்த மசூதி 1505ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது. பயறு (தானியம்) விளைச்சல் மூலம் திரட்டப்பட்ட நிதி அல்லது வரியின் மூலம் இந்த மசூதி கட்டப்பட்டதால் ‘பயிறு மசூதி’ என்று பெயர் நிலைத்து விட்டது. இந்திய மண்ணுக்கு புதிதான இந்த பயறு தானிய விதையை சுல்தான் சிக்கந்தர் லோடி தனது பிரதானிக்கு பரிசாக அளித்ததாக சொல்லப்படுகிறது. மோட் கி மஸ்ஜித் மசூதியை கட்டுவதற்கான அடிக்கல்லை சுல்தான் சிக்கந்தர் லோடியே நட்டதாகவும், பிரதம மந்திரி வாசிர் மியா போயியா’வின் தனிப்பட்ட மசூதியாக இது பயன்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனினும் தற்போது இது வரலாற்று சின்னமாக சுற்றுலாப் பயணிகள் அனைவரும் செல்லும் வகையில் உள்ளது.
கதைகள் ஒரு புறமிருக்க, இந்த மசூதியின் கட்டுமானம் இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது. சிவப்புக்கற்களால் எழுப்பப்பட்டு ஜாலி வேலைப்பாடுகள் கொண்ட ஜன்னல்கள், எண்கோண வடிவில் சமாதி பீடங்கள், விதான வளவு வாசல்கள், குமிழ்கோபுரம் மற்றும் இரண்டு அடுக்குகள் கொண்ட கோபுரங்கள் போன்ற அம்சங்களை இந்த மசூதி உள்ளடக்கியுள்ளது. இங்கு காணப்படும் நுணுக்கமான பூ வேலைப்பாடுகள் அக்கால கலைஞர்களின் திறமைக்கு சான்றாக காட்சியளிக்கின்றன. பொதுவாக அக்காலத்திய டெல்லி நகர இஸ்லாமிய கட்டமைப்புகள் சிவப்பு மணற்பாறைக்கற்களால் கட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனைய மசூதிகளைப்போல் இல்லாமல், மினாரெட்டுகள், எழுத்துக்குறிப்புகள் மற்றும் அலங்காரங்கள் போன்றவை இடம் பெறாத ஒன்றாக இந்த மசூதி காட்சி அளிக்கிறது. தனித்தன்மையான கலையம்சங்களுடன் வீற்றிருக்கும் இந்த மசூதியை காண வெகு தூரத்திலிருந்தும், உலகில் பல பகுதிகளிலிருந்தும் பயணிகள் மற்றும் ஆர்வலர்கள் வருகை தருகின்றனர். தினமும் காலை சூரிய உதயம் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை திறக்கப்படும் இந்த மசூதிக்கு விஜயம் செய்ய கட்டணம் ஏதுமில்லை. இஸ்லாமிய விடுமுறை நாட்களிலும் திறக்கப்படும் இந்த மசூதியில் சமீபகாலமாக அதிகமான பார்வையாளர்கள் கூட்டம் காணப்படுகிறது.