நேஷனல் ஜுவாலஜிகல் பார்க் அல்லது டெல்லி (ஜூ) தேசிய வனவிலங்கு பூங்கா என்று அழைக்கப்படும் இந்த வளாகம் டெல்லி பழைய கோட்டைக்கு அருகில் 214 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சராசரியாக 130 வகையான விலங்கினங்களையும், பறவையினங்களையும் உள்ளடக்கிய 1350 உயிரினங்கள் இந்த பூங்காவில் வசிக்கின்றன.
1959ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்த வனவிலங்கு பூங்காவானது ‘டெல்லி ஜூ’ என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது. பின்னாளில் இதன் பெயர் இந்தியாவின் ஏனைய வனவிலங்கு காட்சிக்கூடங்களும் பின்பற்றும்வகையில் ‘நேஷனல் ஜுவாலஜிகல் பார்க்’ (தேசிய வனவிலங்கு பூங்கா) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பொதுமக்களிடையே பல்லுயிர்ச்சூழல், இயற்கைப்படைப்புகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த வனவிலங்கு பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது.
சிம்பன்ஸீ, சிலந்திக்குரங்கு, ஆஃப்ரிகன் காட்டெருமை, கிர் சிங்கம், இந்திய குரங்கு, எருது, புள்ளி மான், சிறுமான் மற்றும் காட்டு மயில் போன்றவை இங்குள்ள உயிரினங்களின் பட்டியில் அடங்குகின்றன.
ஊர்வன ஜந்துக்களுக்காகவே விசேடமாக ஒரு தரையடித்தள வளாகமும் உள்ளது. இதில் பலவகை பாம்புகள் மற்றும் ஊரும் விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன.
அழிந்து வரும் உயிரினங்களை காப்பதற்காக மத்திய வனவிலங்குத்துறை மேற்கொண்டுள்ள முயற்சிகள் மற்றும் திட்டங்களில் இந்த டெல்லி தேசிய வனவிலங்கு பூங்கா முக்கிய பங்கை வகிக்கிறது.
ராயல் பெங்கால் புலி, இந்திய காண்டாமிருகம், சதுப்பு மான், ஆசிய சிங்கம், கலைமான் மற்றும் சிவப்பு காட்டுக்கோழி போன்றவை இந்த பாதுகாக்கப்படும் உயிரினங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
வெள்ளிக்கிழமைகளை தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் இந்த பூங்கா திறக்கப்படுகிறது. கோடைக்காலத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், குளிர்காலத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் இதன் பார்வை நேரங்கள் அமைந்துள்ளன.
இந்திய பார்வையாளர்களுக்கு 5 ரூபாயும், வெளிநாட்டு பயணிகளுக்கு 100 ரூபாயும் இங்கு நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உணவுப்பண்டங்கள் விற்கும் ஒரு ‘கஃபேடேரியா’ அங்காடியும், பூங்காவை சுற்றிக்காட்டுவதற்கான ஒரு கூரையற்ற மோட்டார் சவாரி வண்டியும் இந்த பூங்காவில் பயணிகளுக்காக பயன்பாட்டில் உள்ளன.