தீன் மூர்த்தி பவன் அல்லது தீன் மூர்த்தி இல்லம் என்று அழைக்கப்படும் இம்மாளிகை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ‘கமாண்டர் இன் சீஃப்’ வசிப்பிடமாக விளங்கியுள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவ்ஹர்லால் நேரு அவர்கள் தனது கடைசி 16 வருடங்களை கழித்த இல்லமாகவும் இது அறியப்படுகிறது.
1930ம் ஆண்டில் இம்பீரியல் இந்தியாவின் தலைநகராக விளங்கிய டெல்லியில் கட்டப்பட்ட இம்மாளிகையாந்து நெருவின் இறப்புக்கு பிறகு அவரது நினைவுகளை தாங்கி நிற்கும் நினைவுச்சின்னமாக (இல்லமாக) மாற்றப்பட்டிருக்கிறது.
இந்த மாளிகையின் முகப்பில் ஆங்கிலேய சிற்பக்கலைஞரால் வடிக்கப்பட்ட மூன்று சிலைகள் அமைந்திருப்பதால் இது தீன்(மூன்று) – மூர்த்தி(சிலை) பவன் என்ற பெயரைப்பெற்றுவிட்டது.
ராபர்ட் டோர் ரஸ்ஸல் எனும் ஆங்கிலேய பொறியாளரால் வடிவமைக்கப்பட்ட இம்மாளிகையில் தற்போது நேரு நினைவு நூலகமும் இடம் பெற்றுள்ளது. இந்திய வரலாறு குறித்த ஆய்வினை மேற்கொள்ள இதைவிட சிறந்த மையம் இருக்க முடியாது.
இந்த நூலகத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட பல புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களின் குறிப்புகள், சேகரிப்புகள், ஆய்வறிக்கைகள் போன்றவற்றையும் இங்கு காணலாம். இந்த இல்லத்திலுள்ள அருங்காட்சியகத்தில் பண்டித நேரு அவர்களின் சில அரிய குடும்ப புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அவர் எழுதிய கடிதங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
சென்டர் ஃபார் கான்டெம்பரரி ஸ்டடீஸ் (சமகாலஆய்வுக்கல்வி மையம்) மற்றும் நேரு பிளானட்டேரியம் எனும் கோளரங்கம் ஆகியவையும் இந்த தீன் மூர்த்தி பவன் வளாகத்தில் இடம் பெற்றுள்ளன.
1964ம் ஆண்டு அப்போதைய இந்திய குடியரசுத்தலைவர் டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணனை தலைவராக கொண்டு துவங்கப்பட்ட ஜவ்ஹர்லால் நேரு அறக்கட்டளையின் தலைமையகமாகவும் இந்த தீன் மூர்த்தி பவன் செயல்படுகிறது.
ராஷ்டிரபதி பவன் எனப்படும் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு அருகிலேயே இந்த தீன் மூர்த்தி பவன் அமைந்துள்ளது. திங்கள் கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த நினைவு இல்லம் பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது. இந்த இல்லத்துக்கு செல்ல வசதியாக அருகில் ரேஸ்கோஸ் மெட்ரோ ரயில் நிலையம் இருக்கிறது.