உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோரகார் மாவட்டத்தில் இந்தியா-நேபாள எல்லையில் அமைந்துள்ள அழகிய நகரம் தார்சூலா ஆகும். இந்தி மொழியில் 'சிகரம்' என்று பொருள் தரும் 'தார்' என்ற வார்த்தை மற்றும் 'அடுப்பு' என்று பொருள் தரும் 'சூலா' என்ற வார்த்தை இரண்டும் சேர்ந்ததுதான் 'தார்சூலா' என்ற இந்த அழகிய நகரத்தின் பெயராகும்.
இந்த மலைப்பகுதி நகரத்தின் அமைப்பு அடுப்பை போன்று இருப்பதாலேயே இந்த பெயர் வழங்கப்பட்டு வருகிறது. மலைகளால் சூழப்பட்டுள்ள இந்நகரம் தலைநகரம் பித்தோரகாரில் இருந்து 90 கிமீ தொலைவில் உள்ளது.
பனியை உடுத்திக் கொண்டிருக்கும் பஞ்ச்சூலி சிகரங்கள் தார்சூலாவை ஜோஹர் பள்ளத்தாக்கிலிருந்து பிரிக்கின்றன. இந்நகரத்திலுள்ள சில சுற்றுலா தலங்களில் மிகவும் புகழ் பெற்றதாக மானசாரோவர் அல்லது மனாஸ் ஏரி உள்ளது.
மானசாரோவர் என்ற நன்னீர் ஏரி சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தில் உள்ளது. இந்த ஏரி இந்து மற்றும் பௌத்த மதங்களுக்கு மிகவும் புனிதமான ஏரியாகும். இந்த நன்னீர் ஏரியின் தண்ணீர் அதனை குடிப்பவர்களின் பாவங்களை துடைத்தெறிந்து, அவர்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் என நம்பப்படுகிறது.
புத்த பெருமான் ஜனித்த இடமாக கருதப்படும் அனவதப்தா என்ற புராணங்களில் வரும் ஏரியுடன் பௌத்தர்கள் மானசாரோவர் ஏரியை தொடர்புபடுத்திப் பார்க்கின்றனர். இந்த ஏரியை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சில மடாலயங்களில், செங்குத்தான மலைகளின் மீது உள்ள சியூ கோம்பா மடாலயம் குறிப்பிடத்தக்க இடமாகும்.
பிரம்மபுத்திரா, கர்னாலி, சிந்து மற்றும் சட்லெஜ் நதிகளின் ஆதாரமாக இருக்கும் உற்பத்தியிடமாக இந்த ஏரி கருதப்படுகிறது. மானசாரோவருக்கு மேற்கில் உள்ள ராக்சஸ்தால் ஏரியையும் சுற்றுலாப் பயணிகள் பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.
மாபெரும் இமயமலைகளில் கலாபானி என்ற இடத்திலிருந்து ஓடத்துவங்கும் காளி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் ராஃப்டிங் செய்ய முடியும். அழகான ஏரியுடன் இணைக்கப்பட்டு இந்த ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டிருக்கும் சிர்கிலா அணைக்கட்டு இன்ப சுற்றுலாவிற்கு மிகவும் பிரபலமான இடமாகும்.
தார்சூலாவிற்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள இடங்களான ஓம் பர்வதம், ஆதி கைலயம், இந்தியா-நேபாள எல்லை, இந்தியா-சீனா எல்லை மற்றும் நாராயண் ஆசிரமம் ஆகியவற்றிற்கும் செல்ல முடியும்.
பட்னாகர் விமான நிலையத்திலிருந்து வாடகை கார்களில் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தை அடைவது மிகவும் எளிது. இந்த விமான நிலையம், புது டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் உள்ள பகல் நேர விமானங்களுடன் இணைக்கும் விதமாக அமைந்துள்ளது.
தார்சூலாவிற்கு அருகிலுள்ள இரயில் நிலையம் டானக்பூரில் உள்ளது. பித்தோரகாரிலிருந்து தார்சூலாவிற்கு இரண்டு அரசு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றிப் பார்க்க வசதியான பருவநிலையை கொண்டிருக்கும் குளிர் காலங்கள் இந்த இடத்திற்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற பருவமாகும்.