இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் தர்மபுரி, கோயில்களுக்கும், ஆலயங்களுக்கும் சிறப்புப் பெற்ற ஸ்தலமாகும். கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் இருக்கும் இந்த நகர், இயற்கை எழில் கொஞ்சும் புண்ணிய இடமாக விளங்குகிறது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையிலும் அமைந்திருக்கிறது.
சென்னை மற்றும் பெங்களூருக்கு நடுவில் தர்மபுரி அமைந்திருப்பதால் இந்த நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள் தர்மபுரிக்கு அடிக்கடி வருகை தருகின்றனர். வரலாற்று ரீதியாக சோழர்கள், ராஷ்டிரகூடர்கள் மற்றும் பாண்டியர்கள் தர்மபுரியை ஆட்சி செய்திருக்கின்றனர்.
தர்மபுரியை சுற்றியுள்ள புனித ஸ்தலங்கள்
தர்மபுரியைச் சுற்றி மிகப் பிரபலமான இந்து சமய கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ சமய ஆலயங்கள் உள்ளன. முக்கியமாக கோட்டை கோவில், சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் திரு தீர்த்தகிரீஸ்ரர் கோயில் போன்ற இந்து சமய திருத்தலங்கள் பக்தர்களைக் கவரும் வகையில் உள்ளன.
மேலும் கிறிஸ்தவ ஆலயங்களான மவுண்ட் கார்மல் ஆலயம், சிஎஸ்ஐ சீயோன் ஆலயம், திரு இருதய கத்தீட்ரல் போன்றவையும் தர்மபுரியை அழகுபடுத்துகின்றன. இந்த கோயில்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.