தர்மஸ்தாலா வரும் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று ரத்னகிரி குன்றின் உச்சியில் அமைந்திருக்கும் பாஹுபலி சிலை. இந்த சிலை 39 அடி உயரமும், 175 டன் எடையும் கொண்டது. ஒரே கல்லால் ஆன இதை 1973-ஆம் ஆண்டு ரஞ்சனா கோபால கிருஷ்ண ஷெனாய் என்பவர் வடிவமைத்தார். பின்பு 1982-ல் இந்த சிலையை வீரேந்திர ஹெக்டே என்பவர் கோயிலின் உள்ளே பிரதிஷ்டை செய்தார்.
இங்கு வருவதற்கு பயணிகள் ரத்னகிரி குன்றின் படிகளில் 20 நிமிடங்கள் நடக்கவேண்டும். இந்த சிலையை தரிசிக்க பயணிகள் காலை 8 முதல் 10 மணி வரையோ, 6 முதல் 7 மணி வரையோ ரத்னகிரிக்கு வரலாம். பாஹுபலி சிலை ஜைனர்களால் தியாகச் சின்னமாகவும், தன்னலமற்றதின் சின்னமாகவும் போற்றப்படுகிறது.
பாஹுபலியும் அவருடைய அண்ணன் பரதனும் ஆட்சிக்காக போர் செய்தனர் என்று புராணம் கூறுகிறது. இந்த போரில் பாஹுபலி வென்றாலும், போரின் கொடுமைகளை பார்த்து மனம் கசிந்து தன் அண்ணன் பரதனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு திகம்பர ஜைனத்தில் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார். பின்பு, பாஹுபலி தான் செய்த பாவத்துக்கு பரிகாரமாக முக்தி அடையும் காலம் வரை நிர்வாணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.