இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் திமாபூர், நாகாலாந்து மாநிலத்தின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. ஒருகாலத்தில் அரசின் பெருமைமிகு தலைநகராக விளங்கிய திமாபூர் இன்று மாநிலத் தலைநகர் இல்லை என்றபோதும் தலைநகர்களுக்கே உரிய உள்கட்டமைப்புடனும், வசதிகளுடனும் சிறந்து விளங்கிறது. திமாசா மொழியில் 'தி' என்பது நீரையும், 'மா' என்பது பிரம்மாண்ட என்பதையும், 'பூர்' என்பது ஊரையும் குறிக்கிறது. பிரம்மாண்ட நதிக்கு அருகில் அமைந்திருக்கும் ஊர் என்பதே திமாபூர் என்பதன் பொருளாகும். இவ்வூரின் வழியாக தன்சிரி நதி ஓடுகிறது.
வரலாறு
கச்சாரி இனத்தவர்களால் ஆளப்பட்ட பண்டையகால திமாச பேரரசின் தலைநகராக விளங்கிய திமாபூர் நகரம் மிக நீண்ட வரலாற்றுப் பெருமை உடையது. திமாபூரைச் சுற்றி இன்றளவும் கிடைக்கும் தொல்பொருட்கள் அவ்வூர் கடுமையான காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததை பறைசாற்றுகிறது.
திமாசா அரசு அருகில் இருக்கும் சமவெளிகளை எல்லாம் உள்ளடக்கி இன்றைய அசாமின் மேற்பகுதி வரை நீண்டிருந்தது. பழங்கால நகரம் இருந்ததற்கான ஆதாரங்கள் கோவில்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் கிடைக்கின்றன.
மேலும் திமாசா மக்கள் இந்து மதத்தைத் தழுவி வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் கிடைக்கின்றன. எனினும் திமாசா மக்கள் இப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் என்றும் ஆரியர்கள் அல்ல என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
நவீன வரலாற்றிலும் திமாபூர் முக்கியப் பங்காற்றியுள்ளது. ஆங்கிலேயர்களுக்கும், காலனிய ஜப்பானிய அரசிற்கும் நடந்த போரில் முக்கியமானதான கோஹிமா போர் திமாபூரின் வழியாக வந்த ஜப்பான் படையினரால் துவக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் திமாபூரை 'சுவர் நகரம்' என்று அழைக்கின்றனர்.
பயணிகளின் கவனத்திற்காக சில புவியியல் தகவல்கள்
நாகாலாந்தின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள திமாபூர் தென்கிழக்கில் கோஹிமா மாவட்டத்தாலும், வடக்கே அசாமின் கர்பி ஆங்லாங் மாவட்டத்தாலும், வடக்கே அசாமின் கோலகட் மாவட்டத்தாலும் சூழப்பட்டுள்ளது. நாகாலாந்து மாநிலத்திலேயே ரயில் மற்றும் விமான வசதி கொண்ட ஒரே நகரமாக திமாபூர் திகழ்கிறது.
நாகாலாந்துக்கு மட்டுமல்லாது மணிப்பூருக்கும் உயிர்நாடியாகத் திகழும் திமாபூர் வடகிழக்கு இந்தியாவின் முக்கியமானப் பகுதியாக விளங்குகிறது. 39ஆம் எண் தேசிய நெடுஞ்சாலை கோஹிமா, இம்பால் ஆகிய நகரங்களை இந்தியாவின் பிற நகரங்களுடன் இணைக்கிறது. மியான்மர் எல்லையில் இருக்கும் மோரே எல்லை திமாபூர் வழியாகச் செல்கிறது.
சுற்றுலாப்பயணிகளின் கவனத்திற்கு கலை மற்றும் கலாச்சார முக்கியத்துவம்
நாகா கைவினைப் பொருட்கள் உலகெங்கும் புகழ்பெற்று விளங்குகிறது. திமாபூரில் அமைந்திருக்கும், மாநிலத்தின் மிகப்பெரிய கைவினைத்தறியில் இருந்து நாகா சால்வைகள் மற்றும் பிற பொருட்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இப்பகுதியின் புகழ்பெற்ற கலை மற்றும் கலாச்சாரப் பொருட்களின் முக்கியத்துவத்தை விரிவுபடுத்தும் பொருட்டு அரசால் இங்கு வடகிழக்கு மாகாண கலாச்சார மையம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கிருக்கும் அருங்காட்சியகத்தில் நாகாலாந்தின் பழங்கால கலைப்பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது அவ்வப்போது கலாச்சார விழாக்களும் நடத்தப்படுகின்றன.
உள்நுழை அனுமதி (Inner line permit)
நாகாலாந்தின் பிற பகுதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ வந்தாலும், திமாபூர் நகரம் மட்டும் இச்சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை என்பதால் திமாபூர் செல்லும் சுற்றுலாப் பயணிகள் உள்நுழை அனுமதிச் சீட்டு வாங்க அவசியம் இல்லை எனினும் நகரத்தை தாண்டிச் செல்ல தடை செய்யப்பட்ட பகுதிக்கான அனுமதி வாங்குதல் அவசியம்.
நேரடியாக துணை ஆணையர் அலுவலகத்தில் இந்த அனுமதி சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் கீழ்க்கண்ட அலுவலகங்களிலும் தடை செய்யப்பட்டப் பகுதிகளுக்கான அனுமதிச் சீட்டைப் பெறலாம்.
• துணை உள்துறை ஆணையர், நாகாலாந்து ஹவுஸ், புதுடில்லி
• துணை உள்துறை ஆணையர், நாகாலாந்து ஹவுஸ், கொல்கட்டா
• உதவி உள்துறை ஆணையர் கவ்ஹாத்தி மற்றும் ஷிலாங்க்
• துணை ஆணையர், திமாபூர், கோஹிமா மற்றும் கோகோக்சுங்க்
திமாபூர் சுற்றுலாத்தலங்கள்
வரலாற்றுப் பாரம்பரியமிக்க வடகிழக்கு நகரமான திமாபூர் ஏராளமான சுற்றுலாத்தளங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
நகரின் மையப் பகுதியில் இருந்து 13கிமீ தொலைவில் அமைந்துள்ள டியெஜெஃப் கைவினை கிராமம் நாகாலாந்து கைத்தறி மற்றும் கைவினைப்பொருள் வளர்ச்சிக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
கலைப்பொருட்கள், கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களை ஊக்குவிக்கும் வண்ணம் இக்கிராமம் செயல்படுகிறது. அதுமட்டுமல்லாது அரிதான கைவினைக் கலைகள், மரவேலைப்பாடுகள், மூங்கில் வேலைப்பாடுகள் ஆகியவற்றையும் இங்கு காணலாம்.
திமாபூரின் முக்கியமான சுற்றுலாத்தளமான பாதுகாக்கப்பட்ட ரங்காபஹார் வனப்பகுதி பல அரிய வகை பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சரணாலயமாகத் திகழ்கிறது.
அசாமில் இருக்கும் நாகா ஹில்ஸ் மாவட்டத்தின் தலைமையிடமாக இருந்த சும்முகெடிமா சுற்றுலாத்தலமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து கர்பி-அங்லாங் மாவட்டத்தை உள்ளடக்கிய திமாபூரின் முழு அழகையும் கண்டுகளிக்கலாம். திமாபூரில் இருந்து 14கிமீ தொலைவில் அமைந்துள்ளது சுமுகெடிமா நகரம்.
உள்ளூர் மக்களுடன் பழகாத எந்த சுற்றுலாவும் நிறைவுப்பெற்றதாக ஆகாது. புத்துணர்ச்சியூட்டும் ருஜாபெமா பகுதியில் இருக்கும் வண்ணமயமான கடைகளில் உள்ளூர் கைவினைப் பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவ்விடத்தில் பயணிகள் உள்ளூர் மக்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
திமாபூருக்கு வருகை தரும் அனைவரும் ட்ரிபிள் நீர்வீழ்ச்சியை சுற்றிப் பார்த்தல் அவசியம். பெயருக்கேற்றார்ப்போல மூன்றி அடுக்குகளாய் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கிறது.