செயிண்ட் தாமஸ் சர்ச் எனும் இந்த பழமையான தேவாலயம் 1598ம் ஆண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டிருக்கிறது. தியூ கோட்டை வளாகத்தின் சுவரை ஒட்டி எழுப்பப்பட்டுள்ள ஒரு மேடை போன்ற அமைப்பில் இந்த தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது.
காதிக் பாணி கட்டிடக்கலை அம்சங்களுடன் இது நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. வெண்ணிறம் பூசப்பட்டு காணப்படும் இதன் வெளிப்புற அமைப்பில் காலத்தால் தேய்மானமடைந்து மங்கலாய் காட்சியளிக்கும் போர்த்துகீசிய சித்தரிப்புகள் மற்றும் ஓவியங்களை இன்றும் பார்க்க முடிகிறது.
இந்த பழமையான ஆலயத்தில் தற்போது பிரார்த்தனைக்கூட்டங்கள் ஏதும் நடத்தப்படுவதில்லை. இருப்பினும் வருடாந்திரமாக நவம்பர் 1ம் தேதியன்று ‘ஆல் செயிண்ட்ஸ்’ திருநாள் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
தற்போது இந்த தேவாலயக்கட்டிடமானது கிறித்துவ மதம் சார்ந்த அரும்பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டிருக்கும் ஒரு மியூசியமாக மாற்றப்பட்டிருக்கிறது.
கிறிஸ்து மற்றும் கன்னி மேரி சிலைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர படிம மரத்தில் செய்யப்பட்ட 400 வருடங்களுக்கு முந்தைய கைவினை பொருட்கள், நிழல் கடிகாரங்கள், புராதன சிலைகள், செயிண்ட் பெனிடிக்ட் மற்றும் செயிண்ட் தாமஸ் ஆகியோரது பளிங்கு சிலைகள், புராதன சிலைகள், கல்வெட்டு குறிப்புகள் மற்றும் இதர பழமையான தேவாலயங்களின் சிதிலங்கள் மற்றும் தியூ தீவுப்பகுதியின் வரலாற்று தலங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
அழகிய நீருற்றுகளை கொண்ட ஒரு தோட்டப்பூங்காவின் வழியாக இந்த பழமையான தேவாலத்திற்கு விஜயம் செய்யலாம். மாலை நேரத்தில் வண்ணமயமான மின்விளக்குகள் ஏற்றப்படுவதல் இந்தப்பகுதி முழுதும் ஜொலிப்புடன் ஒளிர்கிறது.