படேர்வா நகரத்திலுள்ள ஆஷார்பதி சிகரத்தின் அடிவாரங்களில் அமைந்துள்ள ஸ்வரன் பாவ்லி நீரூற்று தங்க நீரூற்று என்றும் அழைக்கப்படுகிறது. மத முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீரூற்றில் நீராடி வருவதால், தங்களுடைய பாவங்கள் கரைந்து விடும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
அக்டோபர் / நவம்பர் மாதங்களில் வரும், அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றியை குறிப்பிடும் நவராத்திரி பண்டிகை நாட்களில், பெருமளவில் வரும் பக்தர்கள், பனி படர்ந்திருக்கும் இந்த நீரூற்றில் குளித்துச் செல்ல தவறுவதில்லை.
இந்த நீரூற்றைப் பற்றி ஆச்சரியப்பட வைக்கும் புராணக் கதை ஒன்றும் உள்ளது. இத்தங்க நீரூற்றில் இப்பகுதியைச் சேர்ந்த ஒரு மூதாட்டி ஒவ்வொரு நாளும் நீர் பிடித்து வந்துள்ளார். ஒரு நாள் அவர் உடலுக்கு முடியாமல் படுத்திருந்த போது, தன்னுடைய மருமகளை இந்த நீரூற்றில் தண்ணீர் எடுத்து வர பணித்தார்.
அப்பொழுது இந்த தங்க நீரூற்றின் கற்களைக் கண்ட மருமகள், அவற்றை தான் அணிந்திருந்த துப்பட்டாவால் மூடி வைத்தார். பின்னர், அவர் தனது சகோதரர்களுடன் திரும்பி வந்த வேளையில், அந்த வெள்ளை நிற துப்பட்டா பனியாக உறைந்திருப்பதைக் கண்டார்.
அந்த துப்பட்டாவை மீண்டும் எடுக்க அவர்கள் செய்த எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிய, அங்கிருந்த தங்கப் பாறைகள் என்றென்றும் துப்பட்டாவின் மறைவிலேயே தங்கி விட்டன.
அதன் பிறகு, இந்த நீரூற்றும் நிரந்தரமாக பனி படர்ந்த இடமாக மாறிவிட்டது. புரணாங்களின் கூற்றுப்படி, கடும் கோடை காலங்களிலும் கூட இந்த நீரூற்று உறைந்து கிடக்கும்.