ராஜஸ்தான் மாநிலத்தின் தெற்கு பகுதியில் மலைக்குன்றுகளின் நகரம் என்ற பெயரைப்பெற்றுள்ள துங்கர்பூர் அமைந்துள்ளது. தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாகவும் இது விளங்குகிறது. வரலாற்றுக் குறிப்புகளின்படி இந்நகரம் துங்கர்பூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்திருக்கிறது. ஆதிகாலத்தில் பீல் எனப்படும் பூர்விக வம்சாவளியினர் இப்பகுதியை ஆண்டு வந்துள்ளனர். வீர்சிங் எனும் மன்னர் துங்கர்பூர் பகுதியை ஒரு பீல் வம்ச தளபதியிடமிருந்து பெற்றுள்ளார்.
பொம்மைத்தயாரிப்பு மற்றும் படச்சட்ட தயாரிப்புகளின் கலையம்சம்
துங்கர்பூர் நகரைப்பற்றி சொல்லும் போது முதலிடம் பெறுவது இந்த தனித்தன்மையான பொம்மைத் தயாரிப்புத் தொழிலாகும். மரத்தாலான பலவிதமான பொம்மைகள் மினுமினுப்பான பூச்சுகளுடன் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
பெரும்பாலும் மனித உருவங்கள் மற்றும் மிருக உருவங்கள் போன்று இவை உருவாக்கப்படுகின்றன. இந்த பொம்மைகள் பல திருவிழாக்கள் மற்றும் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. நுணுக்கமான வேலைப்பாடு கொண்ட படச்சட்டங்களும் (ஃப்ரேம்) இங்குள்ள நகைக்கலைஞர்களால் தயாரிக்கப்படுகிறது.
துங்கர்பூர் நகரம் அரிசி, தேக்கு, மாம்பழம் மற்றும் பேரிச்சை போன்றவற்றின் உற்பத்திக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. துங்கர்பூர் பிரதேசத்திலுள்ள அடர்ந்த காடுகளில் பயணிகள் நடைப்பயணம் மேற்கொண்டு குள்ளநரி, காட்டுப்பூனை, நரி, முள்ளம்பன்றி மற்றும் கீரி ஆகிய விலங்குகளையும் பார்க்கலாம்.
சந்தைகள் மற்றும் திருவிழாக்கள் – கொண்டாட்டத்தின் வெளிப்பாடு!
துங்கர்பூரில் பானேஷ்வர் கோயில் திருவிழாவின்போது நடத்தப்படும் பானேஷ்வர் சந்தை பிரசித்தமான பழங்குடி இன வைபவம் என்றே சொல்லலாம். இந்த திருவிழா மஹா சுக்ல பௌர்ணமித் திருநாளில் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
அச்சமயம் ஏராளமான பயணிகள் இங்கு விஜயம் செய்கின்றனர். இந்த மங்கல நாளில் மாஹி மற்றும் சோம் ஆறுகள் சங்கமிக்கும் ஸ்தலத்தில் புனித நீராடுவதற்காக பீல் வம்சத்தை சேர்ந்த மக்கள் ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களிலிருந்து வருகை தருகின்றனர்.
மேலும், துங்கர்பூரில் ‘வாகல்’ எனும் திருவிழாவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது பழங்குடி நடனம் மற்றும் இசை ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.
இவை தவிர ஹோலி பண்டிகையும் இங்கு ஆட்ட பாட்டங்களுடன் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி மற்றும் அதைத்தொடர்ந்து நடத்தப்படும் பர் பிரிஜ் சந்தை ஆகியன இன்ன பிற விசேஷ உள்ளூர் கொண்டாட்டங்களாகும்.
கல்லில் காட்சியளிக்கும் கட்டிடக்கலை உன்னதங்கள்
அற்புதமான பொம்மைகள், திருவிழாக்கேளிக்கைகள் மற்றும் காட்டுயிர் அம்சங்கள் தவிர்த்து துங்கார்பூர் நகரம் இங்குள்ள ராஜ மாளிகைகள், புராதன கோயில்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது.
இங்குள்ள உதய் பிலாஸ் அரண்மனை அதன் அற்புதமான ராஜபுதன பாணி கட்டிடக்கலை அம்சத்துக்கு பெயர் பெற்று விளங்குகிறது. இந்த பிரம்மாண்டமான அரண்மனை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவை ராணிவாஸ், உதய் பிலாஸ் மற்றும் கிருஷ்ண பிரகாஷ் அல்லது ஏக் தம்பியா மஹால் என்று அழைக்கப்படுகின்றன.
நுணுக்கமான அலங்கார அம்சங்கள் கொண்ட பலகணி மாடங்கள், தோரண வளைவுகள் மற்றும் சாளரங்களைக்கொண்ட இந்த அரண்மனை தற்சமயம் ஒரு பாரம்பரிய விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.
ஜுனா மஹால் எனப்படும் கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட மாளிகையையும் துங்கார்பூர் நகரில் பயணிகள் பார்க்கலாம். கைப் சாஹர் ஏரியின் கரையின் அமைந்துள்ள இந்த அரண்மனை அதன் நுட்பமான ராஜபுத்திர மற்றும் முகலாய பாணி இரண்டும் இணைந்த கட்டிடக்கலை அம்சங்களுக்கு பெயர் பெற்றுள்ளது
துங்கர்பூர் நகரம் பல ஹிந்து மற்றும் ஜைன கோயில்களுக்கு புகழ் பெற்றுள்ளது. பானேஷ்வர் கோயில், புவனேஷ்வர் கோயில், சுர்புர் கோயில், தேவ் சொம்நாத் கோயில், விஜய் ராஜராஜேஷ்வர் கோயில் மற்றும் ஷீநாத்ஜி கோயில் ஆகிய கோயில்களுக்கு பயணிகள் விஜயம் செய்து தரிசிக்கலாம்.
இங்குள்ள கைப் சாஹர் ஏரி தன் கரையைச்சுற்றிலும் கோயில்கள் மற்றும் அரண்மனைகள் ஆகியவற்றுடன் முக்கிய சுற்றுலா அம்சமாக திகழ்கிறது. பயணிகள் மறக்காமல் ராஜமாதா தேவேந்திர கன்வர் அரசு மியூசியம், நாக்ஃபன்ஜி, கலியாகோட் மற்றும் ஃபதேஹ்கர் போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்களையும் பார்த்து மகிழலாம்.
பயண வசதிகள்
துங்கர்பூர் நகரத்தை மிக சுலபமாக விமானம், ரயில் மற்றும் சாலை போன்ற போக்குவரத்து மார்க்கங்கள் மூலம் அடையலாம். உதய்பூர் நகரத்திலுள்ள மஹாராணா பிரதாப் விமான நிலையம் அல்லது தபோக் விமான நிலையம் துங்கார்பூருக்கு அருகாமையில் உள்ள உள்நாட்டு விமானத்தளமாகும்.
வெளிநாட்டு பயணிகளுக்கு வசதியாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இங்கு தினசரி இணைப்புச்சேவைகள் உள்ளன. மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரட்லாம் ரயில் நிலையம் துங்கார்பூருக்கு அருகில் உள்ளது.
இந்த விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து துங்கார்பூர் வருவதற்கு வேன் சேவைகள் உள்ளன. உதய்பூர் மற்றும் அருகிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து சாலை மார்க்கமாக துங்கார்பூர் வருவதற்கு பேருந்து வசதிகளும் நிறைய உள்ளன.
சுற்றுலாவுக்கு உகந்த பருவம்
துங்கர்பூர் வெப்பமான வறட்சியான பருவநிலையை வருடமுழுதும் பெற்றுள்ளது. துங்கார்பூருக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் ஏற்றவையாகும். இக்காலத்தில் ஊர் சுற்றிப் பார்ப்பதற்கேற்ற சுமாரான இதமான பருவநிலை நிலவுகிறது.