மேகாலயா மாநிலத்தின் ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள இந்த லெயிட்கின்சியூ கிராமம் இங்குள்ள வேர்ப்பாலத்துக்கு பிரசித்தமாக அறியப்படுகிறது. உயிருள்ள மரவேர்களால் பின்னி பிணைத்து 53 அடி நீளத்துக்கு ஒரு ஓடையின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் இந்த வேர்ப்பாலம் ‘உம்ன்னோய்’ என்று அழைக்கப்படுகிறது.
இது 100 வருடங்கள் பழமையுடையது என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் மக்கள் இதனை ‘ஜிங்கீங் டெயிங்ஜ்ரி’ என்றும் அழைக்கின்றனர். இந்த பாலத்தை பார்ப்பதற்காகவே உலகெங்கிலுமிருந்தும் பயணிகள் இந்த கிராமத்துக்கு வருகை தருகின்றனர்.
இந்த வேர்ப்பாலம் மேகாலயா மாநிலத்தின் கலை நுணுக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறாது. காசி இன மக்களால் கட்டப்பட்டிருக்கும் இந்தப் பால அமைப்பில் உறுதியான மர வேர்கள் இரு புறமும் பின்னி மாற்றிவிடப்பட்டிருக்கின்றன. உயிருள்ள வேர்கள் என்பதால் அவற்றில் நடந்து ஓடையை கடப்பது எளிதாக உள்ளது.
மேலும் இந்த லெயிட்கின்சியூ கிராமத்திலிருந்து ‘கா லிக்காய்’ நீர்வீழ்ச்சியை நன்றாக பார்த்து ரசிக்கவும் முடிகிறது. அருகிலுள்ள நோன்க்ரியாட் எனும் கிராமத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி விழுகிறது. மழைக்காலம் இந்த நீர்வீழ்ச்சியை பார்த்து ரசிக்க ஏற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமைதியான சூழலின் நடுவே வீட்டைப்போன்று அன்பான உபசரிப்புகளை அளிக்கும் ‘லெயிட்கின்சியூ ரிசார்ட்’ இந்த கிராமத்தில் ஒரு மலையுச்சியில் அமைந்திருக்கிறது. இந்த விடுதியில் 10 அறைகள் மட்டுமே உள்ளன. (மேலும் அறைகள் கட்டும் பணிகள் நடந்துவருகின்றன).
டிரெக்கிங் போன்ற சாகசப்பொழுதுபோக்குகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த ரிசார்ட் விடுதி வசதியான தங்குமிடமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், காசி இன பெண்களால் சமைக்கப்படும் சுவையான உள்ளூர் உணவுகளையும் இந்த விடுதியில் ருசி பார்க்கலாம்.
ஷில்லாங் நகரத்திலிருந்து வாடகை சுற்றுலா வாகனனங்கள் மூலம் இந்த லெயிட்கின்சியூ கிராமத்திற்கு வந்து சேரலாம்.