குகை 1
புத்த விகாரமான இந்த முதல் குகை தெற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் நான்கு அறைகள் உள்ளன. அதில் ஒன்றிலாவது சிலைகள் ஏதும் இல்லை.
குகை 2
புத்தரின் நினைவாக கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில், நீண்டு செல்லும் படிக்கட்டுகள் முடியும் இடத்தில் உள்ளது. இங்கு தனியாக உள்ள மண்டபம், புத்தரின் முடிவடையாத சிற்பங்களின் காட்சிக் கூடமாக இருந்து வருகிறது.
இங்கே காணப்படும் செல்வக் கடவுள் பஞ்சிகா மற்றும் செழுமையின் பெண் தெய்வமான ஹரிதி உள்ளிட்ட கடவுளர்களின் சிலைகள் பெரிதாகவும், கம்பீரமாகவும் காட்சியளிக்கின்றன.
குகை 3
இங்கு புத்தர் அமர்ந்திருப்பது போல் காணப்படும் சிற்பம் ஒன்று முடிக்கப்படாத நிலையில் உள்ளது. அதோடு சிறிய பூவணி வேலைகளாலும், குறியீடுகளாலும் இந்த இடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
குகை 4
ஒரு காலத்தில் இரண்டு அடுக்குகளை கொண்ட இந்த குகை இப்போது சிதைந்த நிலையிலேயே காணப்படுகிறது. இங்கும் புத்தர் அமர்ந்திருப்பது போல் ஒரு சிற்பம் உள்ளது.
குகை 5
இந்த குகை மகர்வதா என்னும் பெயரில் அழைக்கப்படும் புத்த விகாரமாகும். இது 117 அடி ஆழமும், 59 அடி அகலமும் கொண்டது. இங்கு புத்த துறவிகளுக்காக 20 அறைகள் உள்ளன. அதனருகில் புத்த கோயில் ஒன்றும் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இங்கு வரும் போது பெரிதும், குறுகியதுமாக காணப்படும் இரண்டு இருக்கைகளை பயணிகள் தவற விட்டுவிடக் கூடாது.
குகை 6
இங்குள்ள செவ்வக வடிவிலான அரங்கு முழுக்க போதிசத்துவர், மகாமயூரி, தாரா போன்ற உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
குகை 7
இது மற்ற குகைகளை போல் முக்கியமானது அல்ல. இங்கு சில தூண்களோடு கூடிய வெற்று அரங்கமே இருக்கிறது.
குகை 8
ஒரு காலத்தில் புத்த விகாரமாக இருந்த இந்த குகையில் அரிதான புத்தர் சிலைகள் சில உள்ளன.
குகை 9
இந்த குகையில் பெண்தெய்வமான தாரா தன் பக்தர்களை பாம்பு, யானை, தீ போன்ற ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவது போல ஒரு சிற்பம் உள்ளது. அதோடு இங்கு ஒரு கோயிலும் உள்ளது.
குகை 10
இந்த குகை புகழ் பெற்ற கட்டிடக் கலை நிபுணரான விஸ்வகர்மாவின் பெயரால் அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இங்கு விஸ்வகர்மாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நிறைய தச்சர்கள் வந்து சென்றதாக சொல்லப்படுகிறது. அதன் காரணமாக தச்சனின் குடிசை என்ற பொருளில் சுதர் கா சோப்ரா என்ற பெயரிலும் இந்த குகை அறியப்படுகிறது.
இங்கு சைத்யக்ரிஹா எனும் புத்த வழிபாட்டு தலம் ஒன்று உள்ளது. இதன் வாயிலில் நீங்கள் நுழையும் போது தர்மசக்ரா பிரவத்தனமுத்ராவில் அமர்ந்திருக்கும் 11 அடி உயர புத்தர் சிலையை காணலாம். இது சைத்யா பேரரசின் காலத்தில் முக்கியமான இடமாக விளங்கியது.
குகை 11 (தோ தாள்)
தோ தாள் என்றால் இரண்டு தளம் என்று பொருள். இந்த குகையில் மூன்று தளங்கள் இருந்தாலும் இதன் மூன்றாவது தளம் மிகவும் சிறியதாக இருப்பதால் இது தோ தாள் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு புத்தர் அமர்ந்திருப்பது போல் ஒரு சிற்பம் உள்ளது. அதோடு விநாயகர் மற்றும் துர்க்கை அம்மனின் சிலைகளையும் பயணிகள் இங்கு காணலாம்.
குகை 12 (தீன் தாள்)
மகாராஷ்டிராவின் மிகப்பெரிய புத்த விகாரம் இது தான். இது மூன்று தளங்களை கொண்டது. இதன் அகலமான வாயில் வழியே சென்றால் மிகப்பெரிய முற்றத்தை நீங்கள் அடைவீர்கள்.
அங்குள்ள தனித்தனி படிக்கட்டுகள் உங்களை குகையின் வெவ்வேறு தளங்களுக்கு கூட்டிச் செல்லும். இதன் அரங்குகளில் ஏராளமான தூண்களும், ஓவியங்களும், அமர்ந்திருக்கும் புத்தர் சிலையும் உள்ளன.