ஹவேலி தோடர் மால் எனும் இந்த பாரம்பரிய மாளிகை குருத்வாரா ஃபதேஹ்கர் சாஹிப் வளாகத்தின் உள்ளேயே அமைந்திருக்கிறது. 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இம்மாளிகை ‘ஜஹாஸ் ஹவேலி’ மற்றும் ‘ஜஹாஸ் மஹால்’ என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது.
முகாலய ஆட்சிக்காலத்தில் அவர்களது பிரதிநிதியாக இப்பகுதியை ஆண்ட வாசிர் கான் என்பவரது அவையில் திவானாக இருந்தவர் இந்த தோடர் மால் என்று வரலாறு கூறுகிறது.
இவர் குரு கோபிந்த்சிங்ஜி அவர்களின் தீவிர விசுவாசியும் ஆவார். குரு கோபிந்த்சிங்ஜி அவர்களின் மகன்கள் மற்றும் மனைவியின் தகனக்கிரியைகளை நிறைவேற்றுவதற்காக இவர் ஒரு சிறு நிலத்தை வாங்கி அச்சடங்குகளை நிகழ்த்தியதாக சொல்லப்படுகிறது.
சிர்ஹிந்தி கற்களால் கட்டப்பட்டிருக்கும் இந்த ஹவேலி தோடர் மால் மாளிகை வளாகம் முழுதும் நீரூற்றுகள் மற்றும் தடாகங்கள் போன்ற அலங்கார அம்சங்களுடன் காட்சியளிக்கிறது.
இதன் ஒவ்வொரு அங்கத்திலும் அற்புதமான கட்டிடக்கலை நுணுக்கங்கள் மிளிர்வது ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். விருந்தினர்கள் மற்றும் மக்களை சந்திக்க பயன்பட்ட ஒரு பிரம்மாண்டமான வெளிக்கூடமும் இதில் அமைக்கப்பட்டிருக்கிறது.