ஜெலேப்லா பாஸ் மற்றும் நாது லா பாஸ் ஆகிய மலைப்பாதைகளுக்கிடையே இந்த பாபா ஹர்பஜன் சிங் மெமோரியல் கோயில் அமைந்துள்ளது. ஒரு முக்கியமான யாத்ரிக ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.
பக்தர்களை வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் தெய்வீக சக்தி கொண்டதாக இந்த கோயிலின் தெய்வம் கருதப்படுகிறது. இந்த கோயிலில் நுழைவதற்கு முன்பு ஒரு பாட்டில் நீரை வைத்துவிட்டு திரும்பும் போது அதனை தங்களுடன் எடுத்துச்செல்லும் வழக்கத்தை பக்தர்கள் பின்பற்றுகின்றனர்.
பஞ்சாப் ரெஜிமெண்டில் சிப்பாயாக பணிபுரிந்த பாபா ஹர்பஜன் சிங் என்பவரது நினைவாக எழுப்பப்பட்டிருக்கும் இக்கோயிலின் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.
அதாவது, பஞ்சாப் 23 வது ரெஜிமெண்டில் பணிபுரிந்த இவர் 35 வருடங்களுக்கு முன்னர் பொதி சுமக்கும் கழுதைகளை ஓட்டிசென்றபோது கிழக்கு சிக்கிம் பகுதியில் காணாமல் போய்விட்டதாகவும் பின்னர் மூன்று நாட்களுக்கு பிறகு அவரது ஆவியே அவரது சடலத்தை கண்டுபிடிக்க வழிகாட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
சகவீரரின் கனவில் தோன்றி தனக்கு ஒரு கோயிலும் கட்டுமாறு அவர் கேட்டுக்கொண்டதாக இந்தக்கதை முடிகிறது. இப்படியாக இந்த பாபா ஹர்பஜன் சிங் மெமோரியல் கோயில் உருவாகியுள்ளது.
இந்த கோயிலில் அந்த வீரரின் சமாதி இடம்பெற்றுள்ளது. அவரது ஆவி தினமும் இந்த கோயிலை சுற்றி வருவதாகவும் நம்பிக்கை நிலவிவருகிறது. இந்தோ சீன எல்லையில் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய வீரர்களுக்கு அவர் பாதுகாப்பளிப்பதாக நம்பப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 14ம் தேதியில் அவர் விடுமுறைப்பயணமாக பஞ்சாப்பிலுள்ள அவரது சொந்த ஊரான கபுர்தலாவிற்கு செல்வதற்காக அவரது உடைமைகள் ரயிலில் இருக்கை முன்பதிவு செய்து ஏற்றப்பட்டு, இரண்டு வீரர்கள் மூலமாக கொண்டு செல்லப்படுகின்றன.
அவரது தாய்க்கும் ஒரு சிறு தொகை அனுப்பி வைக்கப்படுகிறது. இப்படியாக ஹர்பஜன் சிங் எனும் வீரர் ஆவி ரூபத்தில் பணிபுரிவதாக ஒரு நம்பிக்கை வழக்கத்தில் உள்ளது.