நாது லா பாஸ் எனப்படும் இந்த கணவாய்ப்பாதை சிக்கிம் பகுதியையும் சீனாவின் திபெத் பிரதேசத்தையும் இணைக்கிறது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்த கணவாய்ப்பாதை கடல் மட்டத்திலிருந்து 4310 மீட்டர் உயரத்தில் காங்க்டாக் நகருக்கு கிழக்கே 54 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
புதன்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் காங்க்டாக் பகுதியிலிருந்து விசேஷ அனுமதி பெற்று இந்தியக்குடிமக்கள் மட்டுமே இக்கணவாய் பகுதிக்கு விஜயம் செய்யலாம். இங்கு ஒரு இந்திய போர் நினைவுச்சின்னமும் அமைந்துள்ளது.
இந்த கணவாய்ப்பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் ஏதும் இல்லை. எல்லைப்பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் இரு நாட்டு ராணுவத்தினரை மட்டுமே இங்கு காண முடியும். பல இடங்களில் சரிவான பள்ளங்களைக்கொண்டுள்ள இந்த கணவாய்ப்பகுதியில் நிலச்சரிவும் அடிக்கடி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
நாது எனும் சொல்லிற்கு கேட்கும் செவிகள் என்றும் லா என்பதற்கு பாதை என்றும் திபெத்திய மொழியில் பொருள் கொள்ளப்படுகின்றன. இந்தியா மற்றும் சீனவுக்கிடையே உள்ள மூன்று திறந்த வெளி சோதனைச்சாவடிகளில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது.
இந்த பாதை 1962ம் ஆண்டில் இந்திய சீனப்போருக்கு பின்னர் அடைக்கப்பட்டது. பின்னர் 2006ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட நல்லுறவு ஒப்பந்தங்களுக்கு பின்னர் இப்பாதை மீண்டும் திறக்கப்பட்டது. இந்த பாதையின் மறுதிறப்பு இருநாட்டு வீரர்களின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த பாதை திறக்கப்பட்டதால் இப்பகுதியில் இரு நாட்டு நல்லுறவு மேம்பட்டு மற்றும் வியாபார வளர்ச்சி ஏற்படும் என்று கருதப்பட்டாலும் இது வரை பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.
ஆனால் இந்த பாதை திறக்கப்பட்ட பின் இப்பகுதியிலுள்ள புத்த மற்றும் ஹிந்து யாத்ரீக ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொள்வது எளிதாக உள்ளது.