ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கண்டோலி எனும் இந்த கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம் சாகச ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. கிரிதிஹ் நகரத்திற்கு வட கிழக்கே 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த அணைப்பகுதி இங்குள்ள நீர் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் சாகச விளையாட்டுகளுக்கு பிரசித்தி பெற்றுள்ளது.
பறவை ரசிகர்கள் இங்கு விதவிதமான பறவைகளை பார்த்து ரசிக்கலாம். இங்குள்ள ஒரு காவல் கோபுரத்தின் உச்சியிலிருந்து கண்டோலி அணைத்தேக்கத்தின் அழகு முழுவதையும் தெளிவாக பார்க்கலாம்.
600 அடி உயரமுள்ள ஒரு குன்றின் மீது இந்த கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. படகுச்சவாரி, சிகரமேற்றம், பாறையேற்றம், பாராசெய்லிங் மற்றும் மிதவைப்படகு சவாரி போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களில் இங்கு சுற்றுலாப்பயணிகள் ஈடுபடலாம்.
அதிக ஆபத்தில்லாத யானைச்சவாரி மற்றும் ஒட்டகச்சவாரி போன்று குதூகல பொழுதுபோக்குகளும் இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன.
இந்த அணைத்தேக்க பகுதிக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் கிரிதிஹ் நகரத்தில் உள்ளது. இந்த ரயில் நிலையத்திலிருந்து பேருந்து மற்றும் டாக்சி போன்ற போக்குவரத்து வசதிகள் கண்டோலிக்கு வருவதற்கு கிடைக்கின்றன.
கண்டோலி அணைப்பகுதியின் அடிவாரத்தில் கண்டோலி எனும் கிராமம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த அணையில் தேக்கப்படும் நீரானது கிரிதிஹ் நகரத்தில் வசிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடிமக்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்கிறது.
ஒரு குதிரைச்சேணம் (இருக்கை) போன்று காட்சியளிக்கும் இந்த மலையின் உச்சிப்பகுதியானது எரிமலை வாயைப்போன்ற தோற்றத்துடன் அமைந்துள்ளது.
ஹிமாலயப்பகுதி, ஆப்பிரிக்கா, வட ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் புலம்பெயர் பறவைகளை இந்த கண்டோலி அணைத்தேக்கத்தில் பார்க்கலாம்.
ராட்சத நீர்க்காகம், சைபீரிய வாத்து, சைபீரிய கொக்கு, பிராம்மனி ஷெல்டக் மற்றும் நாற்பது வகையான இதர அபூர்வ பறவைகள் அவற்றின் வாழ்க்கைக்கு ஏற்ற இணக்கமான சூழலைக்கொண்டுள்ள இந்த ஸ்தலத்தில் வசிக்கின்றன.
இருப்பினும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக தற்போது புலம்பெயர் பறவைகளின் வருகை வெகுவாக குறைந்துவருகிறது. அணைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பூங்காவின் உள்ளே பார்வையாளர்கள் பார்த்து மகிழும் வகையில் சில பறவைகள் மற்றும் விலங்குகள் கூண்டுகளில் வைக்கப்பட்டிருக்கின்றன.
குளிர்காலத்தில் புலம்பெயர் பறவைகளை அதிகம் பார்க்க முடியும் என்பதால் அச்சமயம் இங்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். இங்குள்ள பூங்காவில் விளையாட்டு ரயில் மற்றும் குழந்தைகளுக்கான ஊஞ்சல் அமைப்புகள் போன்றவை அமைந்துள்ளன.
கண்டோலி மலைப்பகுதியில் பாறையேற்றம், கயிறு ஏற்றம், ஆறு கடத்தல் மற்றும் இதர அதிசாகச பொழுதுபோக்கு அம்சங்களில் விருப்பம் உள்ளவர்கள் ஈடுபடலாம்.
இந்த பொழுதுபோக்குகளுக்கு ஏற்ற வித்தியாசமான கிரானைட் பாறை அமைப்புகள் இந்த கண்டோலி மலைப்பகுதி முழுதும் நிரம்பியுள்ளன.
இந்த நீர்த்தேக்கத்தில் ஸ்கூபா டைவிங், ராஃப்டிங் எனப்படும் மிதவைப்படகு, பெடல் படகு, அதிவேகப்படகு, ரிங்கோ ரைட், வாட்டர் ஸ்கியிங் எனும் நீர்ச்சறுக்கு மற்றும் வாட்டர் ஸ்கூட்டர் போன்ற ஏராளமான நீர் விளையாட்டு அம்சங்கள் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.
இவை இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து அதிக அளவில் சாகச விரும்பிகளை ஜார்க்கண்ட் மாநிலத்தை நோக்கி ஈர்க்கின்றன.