ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதிஹ் மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த மதுபண் எனும் கிராமம் புகழ்பெற்றுள்ளது. இங்கு 2000 ஆண்டுகள் பழமையான கோயில் ஒன்று அமைந்திருப்பதே இதன் புகழுக்கு காரணம்.
ஜைன மதத்தினரின் முக்கியமான யாத்திரை ஸ்தலமாகவும் இக்கிராமம் விளங்கிவருகிறது. சமோஸ்ஹரன் கோயில் மற்ரும் போமியாஜி அஸ்தான் ஆகிய இரண்டும் இந்த மதுபண் கிராமத்திலுள்ள இரண்டு முக்கியமான கோயில்களாகும்.
மேலும் இங்கு அமைந்திருக்கும் ஜைன மியூசியத்தின் ஜைன புனித நூற்பிரதிகள், எழுத்துப்பிரதிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மியூசிய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தொலைநோக்கியின் மூலமாக பார்வையாளர்கள் பரஸ்நாத் மலைக்கோயிலை தரிசிக்கலாம்.
பரஸ்நாத் கோயிலை நோக்கி மலையேற்றப்பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் இந்த மதுபண் கிராமத்திலிருந்துதான தங்கள் பயணத்தை துவங்க வேண்டியுள்ளது. கோயிலின் வடபகுதியை நோக்கிய 13 கி.மீ தூரமுடைய மலையேற்றப்பாதையாக இது அமைந்திருக்கிறது.
சாலை வசதிகள் யாவுமே இந்த மதுபண் கிராமத்தோடு முடிந்துவிடுவதால் அதற்குப்பின் பரஸ்நாத் மலைக்கோயிலை சென்றடைய மலையேற்றம் மூலமாகத்தான் செல்ல வேண்டியிருக்கும்.
கிரிதிஹ் நகரத்திலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ள மதுபண் கிராமத்தை அடுத்ததாக 10 கி.மீ தூரத்தில் பரஸ்நாத் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கிராமத்தில் உள்ள பழமையான ஜைனக்கோயில்கள் இந்த இடத்தை ஒரு முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக மாற்றியுள்ளன.
இங்கு மாமிச உணவு மற்றும் போதைப்பொருட்கள் போன்ற அம்சங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை பயணிகள் மனதில் கொள்வது நல்லது. மேலும், யாத்ரீகர்களுக்கு வசதியாக இந்த மதுபண் கிராமத்தில் தங்கும் விடுதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த கிராமத்தில் உள்ள கோயில்களின் சுவர்களில் பரஸ்நாத் கோயிலை சித்தரிக்கும் சுவரோவியங்கள் காணப்படுகின்றன. மதுபண் கிராமத்திலிருந்து 19 கி.மீ தூரத்தில் உள்ள பல்கஞ்ச் எனுமிடத்தில் நான்காம் நூற்றாண்டை சேர்ந்த பர்ஷ்வநாதர் சிலை ஒன்றும் உள்ளது.