பண்டைய வேதங்களின்படி, ராதா ராணி மற்றும் கோபியர்கள் கிருஷ்ணருக்காக மானசி கங்கையின் கரையில் காத்திருக்கும் போது வெகு நேரமாகியும் அவர் வராததால் அவரை வரவைக்க வேண்டி ஹரிதேவா என்ற நாமத்தை உச்சரிக்கத்துவங்கினார்களாம்.
அவர்களின் அன்பில் மகிழ்ந்த கிருஷ்ணர் ஏழு வயது பாலகன் வடிவில் இடது கையில் கோவர்தன் மலையையும், வலது கையில் புல்லாங்குழலையும் தாங்கியபடி அங்கு தோன்றினாராம்.
அந்தக் காட்சியில் மயங்கிய ராதையும், கோபியர்களும் தினமும் அங்கு வந்து பக்திப்பாடல்களை பாடத் துவங்கினார்களாம். அதுமட்டுமல்லாது கிருஷ்ணரின் பேரன் தான் ஹர் தேவா கோவிலை கட்டியதாகவும் சொல்கிறார்கள்.
தற்போது இருக்கும் ஹர் தேவா கோவில் ஜெய்பூர் ராஜா பகன்தாஸ் அவர்களால் பதினாறாம் நூற்றாண்டில் அக்பர் காலத்தில் கட்டப்பட்டது. பக்தர்கள் கோவிலில் நுழையும் முன் மானஸி கங்கையில் புனித நீராடி, கோவிலைச் சுற்றி பரிக்ராம பூஜை செய்துவிட்டுதான் கடவுள் தரிசனம் செய்கிறார்கள்.