குண்டூர் நகரத்தின் செழுமையான வரலாற்று பின்னணியின் அடையாளமாக இந்த கொண்டவீடு கோட்டை வீற்றுள்ளது. குண்டூர் எல்லைப்பகுதியில் 12 மைல் தூரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டைக்கு செல்வதற்கு நன்கு பராமரிக்கப்பட்டுள்ள சாலை வசதிகள் உள்ளன.
கொண்டவீடு கோட்டையானது ரெட்டி வம்ச மன்னர்களால் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. 21 கட்டமைப்புகளை இந்த கோட்டை வளாகம் கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சிதிலமடைந்து காணப்பட்டாலும், வரலாற்று கால சித்திரங்களாக இவை பார்வையாளர்களை வசீகரிக்கின்றன.
இந்த கோட்டையை சுற்றிலும் காட்சியளிக்கும் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்காகவும் ஏராளமான பயணிகள் இங்கு விஜயம் செய்கின்றனர். இந்த ஸ்தலத்தில் மலையேற்றம் மற்றும் நடைப்பயணம் போன்ற சாகச பொழுதுபோக்குகளுக்கு ஏற்ற இயற்கை அமைப்புகளும் காணப்படுகின்றன.
கொண்டவீடு கோட்டைக்கு அருகிலேயே கோபிநாதர் கோயில் மற்றும் கதுளாபாவே கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் அமைந்துள்ளன. கோட்டைக்கு செல்லும் வழியிலேயே மற்ற கோயில்களுடன் இவை இடம் பெற்றுள்ளன.
மலை மீதுள்ள இந்த கோட்டைக்கு செல்லும் வாயில் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டியே சில குடியிருப்புகள் மற்றும் ஒரு பெரிய கூடம் போன்றவை வரலாற்றின் பிரமிப்பூட்டும் மிச்சங்களாக காணப்படுகின்றன.