ஹரியானா மாநில அரசால் 1972-ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட சுல்தான்பூர் பறவைகள் சரணாலயத்தில் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் பறவைகள் என 250-க்கும் மேறபட்ட பறவை இனங்களை பார்த்து ரசிக்க முடியும். அதிலும் குறிப்பாக பனிக் காலங்களில் இங்கு வந்தால் சைபீரியா, ஐரோப்பா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் அரிய வகை புலம்பெயர் பறவைகளை காணலாம்.
இங்கு நூலகம், கண்காணிப்பு கோபுரம், குழந்தைகள் பூங்கா, கல்வி மையம் ஆகியவை அமையப்பெற்றிருப்பதால் பறவைகளை கண்டு ரசிப்பதோடு மற்ற வகையிலும் மிகச் சிறந்த பிக்னிக் பகுதியாக சரணாலயம் உள்ளது.
சுல்தான்பூர் பறவைகள் சரணாலயத்தில் காணக்கூடிய உள்நாட்டு பறவைகளாக கொண்டலாத்தி, நெட்டைக்காலி, ஊதாப் பிட்டு தேன்சிட்டு, இந்தியன் ரோலர், வெள்ளை ஐபிஸ், சப்பைச்சொண்டன், சிரிக்கும் வாத்து போன்றவை அறியப்படுகின்றன.
அதேவேளையில் சைபீரிய கொக்கு, செந்நாரை, மர உள்ளான், பொன்மாங்குயில், மஞ்சள் வாலாட்டி குருவி உள்ளிட்ட புலம்பெயர் பறவைகளையும் இங்கே கண்டு ரசிக்கலாம்.