குவஹாத்தி நகரத்திற்கு விஜயம் செய்யும் பயணிகள் தவறாமல் விஜயம் செய்ய வேண்டிய ஸ்தலங்களில் ஒன்று இந்த சுக்ரேஸ்வர் கோயில். சிவபெருமானுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் 1744ம் ஆண்டில் ஆஹோம் வம்ச மன்னர் பிரமத்தா சிங்கா என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.
ராஜேஷ்வர் சிங்கா எனும் மற்றொரு மன்னரின் பங்களிப்பையும் கொண்டிருக்கும் இந்த கோயில் அஸ்ஸாம் மாநில வரலாற்றின் ஒரு முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது.
சைவ ஆன்மிக மரபினை வளர்த்ததில் இந்த கோயிலின் பங்கு முக்கியமானதாகவும் சொல்லப்படுகிறது. சுக்ரேஷ்வர் மலை அல்லது இடகுலி மலை என்று அழைக்கப்படும் மலையின்மீது பிரம்மபுத்ரா ஆற்றின் தென்கரைக்கு அருகில் பன்பஜார் எனும் இடத்தில் இந்த கோயில் வீற்றிருக்கிறது.இந்த இடம் குவஹாட்டி நகரத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும்.
இந்த கோயில் ஸ்தலத்திலிருந்து பிரம்மபுத்திரா நதியை நோக்கி நீண்டு செல்லும் படிகள் பயணிகளை வெகுவாக கவரும் அம்சமாக அமைந்திருக்கிறது. இங்குள்ள ஆற்றுப்பகுதியில் சூரியன் அஸ்தமிக்கும் அழகுக்காட்சி அவசியம் தரிசிக்கவேண்டிய ஒன்றாகும்.
இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினரும் இந்த ஸ்தலத்தின் எழிற்காட்சிகளை விரும்பி ரசிக்கின்றனர். அக்காலத்தில் சிறப்பாக விளங்கிய ஆஹோம் வம்சத்தின் கட்டிடக்கலை அம்சங்களையும் இந்த கோயிலில் கண்டு வியக்கலாம்.