குவாலியரில் உள்ள கூர்ஜரி மஹாலானது, இந்தியாவிலுள்ள பழமையான தொல்லியல் அருங்காட்சியகங்களில் ஒன்று ஆகும். இக்கட்டிடம் உண்மையில் ஒரு அரண்மனை ஆகும்.
கூர்ச்சர (குஜ்ஜார்) இளவரசியும் ராஜா மான் சிங்கின் மனைவியுமான மிருங்கநயனி என்பவருக்கு மன்னர் கட்டிக்கொடுத்த அரண்மனைதான் இது. அதனால் தான் இவ்வரண்மனைக்கு கூர்ஜரிமஹால் என்று பெயர் வந்தது.
1922-ஆம் ஆண்டு தொல்பொருள் துறையினரால் இந்த அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் 9000 அரிய பொருள்கள் 28 கேலரிகளில் வைக்கப்பட்டுள்ளன.
முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய பொருள்களும் இங்கு உள்ளன. விலையுயர்ந்த மணிகள், நகைகள், சுடுமண் பொருள்கள், ஆயுதங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுக்கள், பானைகள் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இங்கு உள்ள சிற்பங்களில் உலகப்புகழ்பெற்ற ஷலபஞ்சிகா யக்ஷி, திருமூர்த்தி நடராஜர், அர்த்தநாரீஸ்வரர், எமராஜன் ஆகியோரின் சிற்பங்களும் உள்ளன. குவாலியரின் மது மற்றும் தர் ஆகிய பகுதிகளின் 75 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
இப்பகுதியில் கி.பி.15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தான்சேன் என்னும் இசைக்கலைஞரின் வாழ்க்கை பற்றிய ஆவணங்களும் உள்ளன. வரலாற்று ஆர்வலர்களும் இந்திய வரலாற்றினைப்பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமுடையவர்களும் அவசியம் சென்று பார்க்கவேண்டிய அருங்காட்சியகம் இதுவாகும்.