6-வது சீக்கியக் குருவான குரு ஹர்கோவிந்த் சாஹிப்பின் நினைவாக, திகழ்வது குருத்வாரா தாதா பந்தி சோர் ஆகும். வரலாற்றின்படி, குரு ஹர்கோவிந்த் சாஹிப், மன்னர் ஜஹாங்கீரால் கைது செய்யப்பட்டு குவாலியர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
அவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார். அவர் முகலாயர்களுக்கு எதிராக ஆயுதப் புரட்சி செய்யத்தூண்டினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரது விடுதலை ஆணை வழங்கப்பட்டபொழுது அவர் தன்னுடன் கைதிகளாக சிறையிலிருந்த 52 இந்து மன்னர்களின் விடுதலையையும் கோரினார். குரு ஹர்கோவிந்த் சாஹிப்பின் மேலாடையைப் பிடித்திருக்கும் அனைவரையும் விடுதலை செய்வதாக ஜஹாங்கீர் உத்தரவிட்டார்.
அதன்படி சிறையிலிருந்த 52 இந்து மன்னர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அதனால் குரு ஹர்கோவிந்த் சாஹிப் தாதா பந்தி சோர் என்று அழைக்கப்பட்டார்.
கைதிகளை விடுதலை செய்தவர் என்பது இதன் பொருள். அவரது நினைவாக 1970-ஆம் ஆண்டு குருத்வாரா தாதா பந்தி சோர் கட்டப்பட்டது. சீக்கியர்களின் புகழ்மிக்க புனித யாத்திரைத்தலமாக இது விளங்குகிறது.