இந்தியாவின் புகழ்பெற்ற பெருமைமிக்க நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும், குவாலியர் கோட்டை குவாலியர் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. ஒரு குன்றின் உச்சியில் அமைந்திருப்பதால், மலையடிவாரத்திலுள்ள குவாலியர் நகரம் மற்றும் அழகிய பள்ளத்தாக்கின் கவின் மிகு காட்சியைக் கண்டு இன்புற முடியும்.
கோட்டைக்குச் செல்வதற்கான குறுக்கும் நெடுக்குமான பாதை நெடுகிலும், ஜைன தீர்த்தங்கரர்களால் பிரம்மாண்டமான பாறைகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.
தோமார் வம்சத்தினைச் சேர்ந்த ராஜா மான்சிங் தோமார் என்பவரால் இப்போதுள்ள குவாலியர் கோட்டை கட்டப்பட்டது. இந்திய கட்டிடக்கலை நுணுக்கத்தில், சீன கட்டிடக்கலையின் தாக்கம் ஏற்பட்டிருப்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது, இக்கோட்டையின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடக் கலைநுணுக்கமாகும்.
குவாலியர் கோட்டையின் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சீன டிராகன் உருவங்கள் அக்காலத்தில் நிலவிய இந்திய சீன உறவுக்கு சான்றாக விளங்குகின்றன. மத்திய கால இந்திய கட்டிடக்கலைக்கு சிறப்பான எடுத்துக்காட்டாக இக்கோட்டை விளங்குகிறது.
இக்கோட்டை, "இந்தியாவின் ஜிப்ரால்டர்" என்று அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக இக்கோட்டை பல ராஜ வம்சங்களின் அரசாட்சியைக் கண்டு நிற்கிறது. ஆங்கிலேயர் காலத்தில், ஜான்ஸியின் ராணி லட்சுமி பாய்க்கும், தாந்தியா தோபேக்கும் ஆங்கிலேயருக்கு எதிரான போர்க்களமாக குவாலியர் கோட்டை விளங்கியது.