ஜெய் விலாஸ் மஹாலிலுள்ள சிந்தியா அருங்காட்சியகம், ஜிவாஜி ராவ் சிந்தியா அரருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது. சிந்தியா வம்சத்தின் சிறப்பு வாய்ந்த மன்னரான ஜிவாஜி ராவ் சிந்தியாவின் நினைவாக இவ்வருங்காட்சியகம் பெயரிடப்பட்டுள்ளது.
சிந்தியா வம்சத்தின் வழிவந்தவர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த அவ்வம்சத்தின் பெருமைக்குரிய பொருள்களில் எஞ்சியவற்றை பொதுமக்களுக்கு காட்சிக்கு வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 1964 ஆம் ஆண்டு ஒரு அறக்கட்டளையினரால் இக்காட்சியகம் தொடங்கப்பட்டது.
ஓவியங்கள், ஆயுதங்கள், சிற்பங்கள், கையெழுத்துப்பிரதிகள், நாணயங்கள், இசைக்கருவிகள், பெர்சிய கம்பளங்கள், மலபார் மரவேலைப்பாடுகள் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருள்களில் சில. சீனா, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட வினோதமான, ஆர்வத்தைத்தூண்டும் பல பொருள்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
பல டன் எடை கொண்ட இரண்டு மிகப்பிரம்மாண்டமான பெல்ஜிய சர விளக்குகள் இங்கு தொங்கிக்கொண்டுள்ளன. ஔரங்கசீப் பயன்படுத்திய வாள்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.