நேரம் இருப்பின் ஹம்பிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள யானைக் கூடத்தை பார்க்கலாம். அக்காலத்து மன்னர்கள் தங்கள் படை மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்திய யானைகளை இந்த மண்டபங்களில் வைத்து பராமரித்தனர்.
ஹம்பியிலுள்ள பொதுக் கட்டிடங்களிலேயே மிக சிறப்பானது என்று சொல்லும்படியாக இந்தோ-இஸ்லாமிக் கட்டிடக்கலை மரபுப்படி இந்த மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.இந்த அமைப்பானது 11 பிரம்மாண்டமான உயரமான அறைகளை கொண்டுள்ளது.
இந்த அறைகளின் மேற்பகுதி குமிழ் வடிவ விதான வடிவமைப்பை கொண்டுள்ளது. கல்லாலும் சுண்ணாம்பாலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த குமிழ் விதானங்கள் வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.
முரசு வடிவத்திலும், எண் முகம் கொண்டதாகவும், வரிவரியான அமைப்பை கொண்டதாகவும் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
மையத்திலுள்ள குமிழ் விதானம் மிகப் பெரியதாக காணப்படுகிறது. இதற்கு கீழே இசைக்குழுவினர் இருந்து முக்கியமான யானைகள் தொடர்பான திருவிழாக்கள் அல்லது சடங்குகளின்போது போது இசைக்கருவிகளை இசைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இங்கு உள்ளே இருக்கும் கூரைப்பகுதியில் யானைகளை கட்டுவதற்கு பயன்படுத்திய இரும்பு வளையம் உள்ளதை காணலாம். ஒவ்வொரு அறையின் பின்புற மூலையிலும் யானைப் பாகன்கள் பாதுகாப்பாக நுழைவதற்கு சிறியதான தரைவழித் துவார கதவுகள் இருக்கின்றன.
இது போன்ற பல நுணுக்கமான விஷயங்கள் சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.