விருபாக்ஷா கோயிலுக்கு அருகே ஆற்றின் மறுபுறம் அமைந்துள்ள பகுதி இந்த விருபாபூர் ஹட்டே எனும் கிராமம் ஆகும். பலவிதமான சுற்றுலா குடில்களும், விடுதிகளும் நிறைந்து காணப்படும் இந்த பகுதி உல்லாசம் விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு உகந்த இடமாகும். இது ‘ஹிப்பி கிராமம்’ என்றே அழைக்கப்படுகிறது.
ஆற்றை கடந்து இந்த இடத்துக்கு செல்வதற்கு பால வசதி இல்லாததால் பரிசல் மூலமாக மட்டுமே செல்ல முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.விருபாபூரில் புக்கா என்றழைக்கப்படும் நீர்ப்பாலத்தின் இடிபாடுகளை காணலாம். இந்த புக்கா என்ற நீர்ப்பாலம் ஆற்றின் குறுக்காக கால்வாய் நீர் கடந்து வரும்படி அந்நாளிலேயே அமைக்கப்பட்டிருந்த ஒரு நீர் வழிப் பாலம் ஆகும்.
விருபாபூரிலிருந்து பிரதான சாலைக்கு இந்த நீர்ப்பாலத்தின் வழியே சென்று அங்கிருந்து ஆஞ்சநேயர் கோயில், ஆனேகொண்டி மற்று பம்பா சரோவர் போன்ற இடங்களுக்கு செல்லலாம்.
விருபாபூர் பகுதியை பகலில் சுற்றிப்பார்த்து விட்டு இரவில் இங்குள்ள குடில்களில் தங்கி ஓய்வெடுக்கலாம். மலைப் பாறையேற்றம் என்ற சாகச பொழுது போக்கில் ஈடுபட விரும்புவோர்க்கு இந்த விருபாபூர் மிக பொருத்தமான இடமாகும். இங்குள்ள விடுதிகள் இதற்கான கருவிகளையும் சேவைகளையும் பயணிகளுக்கு கொடுக்கின்றன.