ஹம்பியின் மிக முக்கியமான வரலாற்று சின்னமாக இந்த அரண்மனை அந்தப்புர வளாக ஸ்தலம் விளங்குகிறது. அழகாக வெட்டப்பட்ட கருங்கற்களை கொண்டு எழுப்பப்பட்ட உயரமான பாதுகாப்பு சுவரை கொண்டுள்ளது இந்த அரண்மனை அந்தப்புர வளாகம்.
தற்சமயம் இந்த அந்தப்புர வளாகத்தில் நான்கு முக்கிய கட்டிடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ராணி மாளிகை, கமலா மஹால் (தாமரை மஹால்) மற்றும் இரண்டு காவல் கோபுர அமைப்புகளே அவை. இவற்றில் தாமரை மஹால் ராணியும் தோழிகளும் வசதியாக ஓய்வெடுப்பதற்காக கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இங்குள்ள ராணி மாளிகை 46X29 மீட்டர்கள் என்ற அளவில் மரக் கட்டுமான பொருட்களாலும் லேசான பொருட்களை பயன்படுத்தியும் கட்டப்பட்டுள்ளது. வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி அக்காலத்தில் பெண்கள் மட்டுமே இந்த அரண்மனை அந்தப்புர வளாகத்தில் நுழைவதற்கு அனுமதி இருந்தது.
இதற்கு பிரதான காரணம் பாதுகாப்பை விடவும் அரண்மனை அந்தப்புரத்தில் இருந்த ராணிகளுக்கும் மற்ற பெண்களுக்கும் அவர்களின் கௌரவத்திற்கேற்ற தனிமை கிடைக்க வேண்டும் என்பதே.
மேலும் அந்தப்புரத்தை காவல் காப்பதற்கென்று திருமங்கையர் மட்டுமே காவலாளிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர். ராணிகளும், ராஜ குடும்ப பெண்களும் மற்ற அந்தப்புர மகளிரும் இந்த இரண்டு காவல் கோபுரங்களையும் வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், தாமரை மஹாலை கூடி சந்தித்து பேசி மகிழ்வதற்கு பயன்படுத்தினர் என்று கூறப்படுகிறது.
இந்த அந்தப்புர வளாகத்திற்கு வருகை தரும் பயணிகள் அருகில் உள்ள யானைக் கொட்டில் என்று சொல்லப்படும் யானை மண்டபத்தையும் சென்று பார்க்கலாம்.