இந்தியாவில் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் மாநிலங்களில் ஒன்று ஹரியானா. இது கிழக்கில் உத்தரப்பிரதேசத்தையும், மேற்கில் பஞ்சாப்பையும், தெற்கில் ராஜஸ்தானையும், கிழக்கில் ஹிமாசலப்பிரதேசத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. நாட்டின் தலைநகரமான டெல்லிக்கு அருகாமையில் உள்ளதோடு டெல்லி மாநகரத்தின் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளை ஒட்டியதாகவும் ஹரியானா அமைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1966ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இம்மாநிலம் உருவாக்கப்பட்டது.
ஹரியானா மாநில சுற்றுலா அம்சங்கள்
டெல்லியிலிருந்து சில நிமிட பயண தூரத்திலேயே உள்ள ஹரியானா மாநிலத்தில் ஓவியம் போன்ற இயற்கைக்காட்சிகள் மற்றும் தனித்தன்மையான சுற்றுலாத்தலங்கள் போன்றவை நிரம்பியுள்ளன.
மஹாபாரதப்போர் நிகழ்ந்த குருக்ஷேத்ரா ஸ்தலம் இம்மாநிலத்தில்தான் உள்ளது. ஃபரிதாபாத் நகரில் உள்ள பத்கால் ஏரி இம்மாநிலத்தின் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும்.
பிவானி எனும் இடத்திற்கு அருகிலுள்ள நட்சத்திர வடிவ நினைவுச்சின்னம் ஒன்று உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. கோயில்கள், கோட்டைகள், ஏரிகள் மற்றும் பூங்காக்கள் என ஒரு சுற்றுலாப்பயணி விரும்பக்கூடிய யாவும் ஹரியானா மாநிலத்தில் இடம் பெற்றுள்ளன.
மக்கள் மற்றும் கலாச்சாரம்
செழுமையான ஒரு கலாச்சார பின்னணி கொண்ட மாநிலமே ஹரியானா. இம்மாநிலத்தின் வரலாறு வேத காலத்திலிருந்தே துவங்குகிறது. பிரம்மா இந்த இடத்தில் வேள்விகளை நடத்தி பின் இந்த உலகைப்படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இன்னும் ஏராளமான அம்சங்கள் ஹரியானா மாநிலத்தின் பெருமை மிகுந்த கலாச்சாரப்பின்னணிக்கு சான்றாக அமைந்திருக்கின்றன. இந்த மண்ணில்தான் வேத வியாசர் மஹாபாரதத்தை எழுதியுள்ளார். யோகா, தியானம் மற்றும் மந்திர உச்சாடனங்கள் போன்றவை இன்றும் இப்பகுதி மக்களால் பின்பற்றப்படுகின்றன.
இந்தியாவின் வடபகுதிக்கான நுழைவாயிலாக அமைந்திருந்ததால் புராதன காலம் தொடங்கி வரலாற்றுகாலம் வரை பல முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை இம்மண் சந்தித்துள்ளது.
வீரம் பொருந்திய இந்த பூமியின் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், பாரம்பரியத்துக்காகவும் போரிடுவதற்கு தயங்காத போர்க்குணம் படைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியானா திருவிழாக்களும் பண்டிகைகளும்
முன்னதாக பஞ்சாப் மாநிலத்தின் ஒரு அங்கமாக ஹரியானா மாநிலம் இருந்த காரணத்தால் இந்த இரு மாநிலங்களின் கலாச்சாரங்களுமே ஏறக்குறைய ஒன்றாக காணப்படுகின்றன.
ஹர்யான்வி, ஹிந்தி, பஞ்சாபி, உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் இந்த மாநிலத்தில் பரவலாக பேசப்படுகின்றன. இந்தியாவின் எல்லா முக்கிய பண்டிகைகளுமே ஹரியானாவிலும் கோலாகலமாக மக்களால் கொண்டாடப்படுகின்றன.
லோஹ்ரி எனும் பண்டிகை ஹரியானா மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மண் வளத்தை வரவேற்கும் இந்த பண்டிகை குளிர்காலத்திற்கு அடுத்து மகரசங்கராந்தி பண்டிகைக்கு முன்னதாக கொண்டாடப்படுகிறது.
பாரம்பரியமாக பஞ்சாப் மாநிலத்தில் உருவான இந்த பண்டிகை தற்போது ஹரியானா முழுதும் கொண்டாடப்படுகிறது.
கங்கோர், பைசாகி, குக்கா நௌமி, சூரஜ்குண்ட் கிராஃப்ட் மற்றும் கார்த்திகை திருவிழா போன்ற திருவிழாக்களும் ஹரியானா மாநிலத்தில் கொண்டாடப்படுகின்றன.
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 1 ம் தேதி ‘ஹரியானா டே’ எனும் திருவிழாக்கொண்டாட்டமும் நிகழ்த்தப்படுகிறது. இது ஹரியானா சுற்றுலாக்கழகம் துவங்கப்பட்ட நாளாகும்.
ஹரியானா – ரொட்டி தயாரிப்பிற்கு புகழ் பெற்ற மாநிலம்
ஹரியானா மாநிலத்தின் உணவுத்தயாரிப்பு முறைகள் இந்த பூமியின் கலாச்சாரம் மற்றும் மக்களைப்போன்றே மிக எளிமையானவையாக உள்ளன. சத்தும் சுவையும் கொண்ட ரொட்டி இந்த மாநில மக்களின் பிரியமான அடிப்படை உணவாகும்.
பால் உற்பத்தியில் சிறந்து விளங்குவதால் இங்கு தயாரிக்கப்படும் எல்லா உணவு வகைகளிலும் பால் ஒரு முக்கியமான சேர்மானப்பொருளாக இருக்கும்.
பொதுவாக ஹரியானாவாசிகள் சத்தும் போஷாக்கும் அளிக்கும் உணவு வகைகளை தேர்வு செய்பவர்களாக உள்ளனர். பெருநகரங்களில் தற்போது பரவிவரும் சத்தற்ற மேற்கத்திய பாணி உணவு வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இவர்களது உணவுவகைகள் காணப்படுகின்றன.
லஸி, கச்றி கி சப்ஜி, மிக்சட் தால் மற்றும் மெத்தி கஜ்ஜார் போன்றவை இம்மக்களிடையே பிரசித்தமாக விளங்கும் சில முக்கியமான உணவுப்பண்டங்களாகும்.
போக்குவரத்து வசதிகள்
இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுடனும் விமானம், ரயில் மற்றும் சாலைவழி போக்குவரத்து வசதிகள் மூலம் ஹரியானா மாநிலம் இணைக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் தலைநகரான டெல்லிக்கு மிக அருகில் உள்ளதால் ஹரியானாவுக்கு விஜயம் செய்வது மிக எளிதான ஒன்றாகவே உள்ளது.
பருவநிலை
வருடமுழுதும் ஹரியானா மாநிலத்தில் பெருங்கண்ட பருவநிலை நிலவுகிறது. கோடைக்காலம் முழுதும் கடும் வெப்பமும், குளிர்காலத்தில் கடுங்குளிரும் இங்கு நிலவுகின்றன.
கர்ணால் மற்றும் அம்பாலா மாவட்டங்கள் தவிர ஹரியானா மாநிலத்தில் அதிக மழைப்பொழிவு காணப்படுவதில்லை. மஹேந்திரகர் மற்றும் ஹிஸ்ஸார் போன்ற மாவட்டங்கள் மிக மிக குறைவான மழையையே பெறுகின்றன.