கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்துக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் கண்டிப்பாக இந்த நுக்கேஹள்ளி எனப்படும் புகழ் பெற்ற ஆன்மீகத்தலத்துக்கு விஜயம் செய்வது நல்லது. இந்த புண்ணிய நகரம் இங்குள்ள லக்ஷ்மி நரசிம்மர் கோயிலுக்கும் சதாசிவ கோயிலுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது.
இந்தக்கோயில்கள் சோப்புப்பாறை எனும் விசேஷமான வழவழப்பு கற்களால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடத்தில் நுப்பள்ளி மற்றும் நுக்குபள்ளி என்றும் அழைக்கப்படும் இந்த நுக்கேஹள்ளி நகரம் ஹாசன் நகரத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் திப்தூர் – சன்னராயபட்னா மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
நுக்கேஹள்ளியில் அமைந்துள்ள இந்த இரண்டு கோயில்களுமே ஹொய்சள ஆட்சியில் வீர சோமேஷ்வர மன்னரின் தளபதியான பொம்மன்ன தண்டநாயகாவால் கட்டுவிக்கப்பட்டுள்ளன.1246ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள லட்சுமி நரசிம்மர் கோயில் திரிகூட அமைப்பையும் (மூன்று கோபுரங்கள்), அழகிய சிற்பங்கள் நிறைந்த பூஜைக்கூடத்தையும் கொண்டுள்ளது.
கோயில் கட்டுமானம் முடிந்தபிறகு ஒரு பெரிய மண்டபமும் இங்கு கட்டப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. மையத்திலிலுள்ள மூடப்பட்ட மண்டபம் மூன்று சன்னதிகளையும் 9 மேடைப்பாதைகளையும் கொண்டுள்ளது. இந்தக்கோயிலின் விசேஷ அம்சம் நின்ற நிலையின் காட்சியளிக்கும் அற்புதமான பார்வதி தேவி சிலை ஆகும்.சதாசிவ கோயில் ஏககூட கோயில் அமைப்புடன் நகர பாணி கோபுரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் கர்ப்பகிருகத்தில் ஒரு பெரிய சிவலிங்கம் காணப்படுகிறது.
கலையம்சத்தோடு வடிக்கப்பட்டுள்ள ஒரு நந்தி சிலை கல் சாளரங்கள் சுவரில் பதிக்கப்பட்ட ஒரு சன்னதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் வளாகத்தில் இரண்டு கணேச சிலைகளையும் பக்தர்கள் காணலாம். ஒன்று தேவி சன்னதியின் வாசலிலும் மற்றொன்று லிங்க கருவறையிலும் அமைந்துள்ளன.