ஹஸ்தினாபூர் நேஷனல் பார்க் என்றும் அழைக்கப்படும் இந்த சரணாலயம் இயற்கையின் சில உன்னத அம்சங்களை அவற்றின் கன்னிமை மாறாமல் கொண்டுள்ளது. 1986ம் ஆண்டில் இந்த வனப்பகுதி அதிகாரபூர்வமாக ஒரு காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
2073 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் கங்கையை ஒட்டியுள்ள சதுப்பு நிலப்பகுதியை உள்ளடக்கியிருக்கிறது. பலவகையான உயிரினங்கள் மற்றும் தாவர வகைகள் இந்த வனப்பகுதியில் நிரம்பியுள்ளன.
ஒரு கணக்கீட்டின்படி இங்கு 350 வகையான பறவைகள் வசிப்பதாக சொல்லப்படுகிறது. வண்ணக்கொக்கு, சாரஸ் கொக்கு, கறுப்பு மற்றும் வெள்ளைக்கழுத்து கொக்கு, இந்திய கொம்பு ஆந்தை, காட்டு அவுலெட், மரங்கொத்தி, மீன்கொத்தி, தேனிப்பிடிப்பான் மற்றும் புல்புல் போன்ற பறவைகள் இங்கு காணப்படுகின்றன.
பல்வேறு தாவர வகைகள் நிரம்பியுள்ள இந்த வனத்தில் பாலூட்டி வகை மற்றும் ஊர்வன வகை விலங்குகள் ஏராளம் வசிக்கின்றன. பாம்புகள், பல்லி வகைகள், நீர்நில வாழ்வன, அழகிய வண்ணத்துப்பூச்சிகள், தேள்,பூரான், குளவி வகைகள் போன்றவை இங்கு அதிகம். தேசியப்பறவையான மயில் இங்கு அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது.
துரதிருஷ்டவசமாக இந்த சரணாலயத்தின் தூய்மையானது வணிக தொழிற்சாலை நிறுவனங்களாலும், சுரங்கம் தோண்டுவோராலும், கல் உடைப்பவர்களாலும் சிதைக்கப்பட்டு வருகிறது.