ஃபலக்னுமா பேலஸ் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை ஒரு ஆங்கிலேய கட்டிடக்கலை நிபுணரால் வடிவமைக்கப்பட்டதாகும். 1884ம் ஆண்டு இதன் கட்டுமானம் துவங்கப்பட்டிருக்கிறது.
அப்போதைய ஹைதராபாத் பிரதானியாக விளங்கிய நவாப் விகார்-உல்-உம்ரா என்பவருக்கு சொந்தமான இம்மாளிகை பின்னாளில் நிஜாம் மன்னர்களுக்கு உரிமையாக்கப்பட்டுள்ளது.
இந்த அரண்மனையின் பெயருக்கு உருது மொழியில் ‘வானத்தின் கண்ணாடி’ என்பது பொருளாகும். சார்மினார் அலங்கார வளைவிலிருந்து 5 கி.மீ தூரத்திலுள்ள இந்த அரண்மனைக்கு பயணிகள் சுலபமாக சென்றடையலாம்.
ஒரு தேளின் உருவம் போன்று இந்த அரண்மனை வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் விசேஷமான அம்சமாகும். தேளின் இரண்டு முன்புற கொடுக்குகளை சித்தரிக்கும்படியாக அரண்மனையின் வெளிப்புற நீட்சிகள் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன.
தேளின் உடல்பகுதியாக அரண்மனையின் பிரதான உட்கட்டமைப்புகள் மற்றும் சமையல் கூடம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஜெனனா மஹால் எனப்படும் அந்தப்புரம் மற்றும் மகளிர் குடியிருப்பு போன்றவை தெற்கு நோக்கிய பின்பகுதியில் இடம் பெற்றுள்ளன.
துடோர் மற்றும் இத்தாலிய கட்டிடக்கலை அம்சங்களின் கதம்பமாக இந்த அரண்மனையின் வடிவமைப்பு காட்சியளிக்கிறது. ஜன்னல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் துடோர் பாணியில் வண்ணப்பூச்சு அலங்கார நுணுக்கங்களை கொண்டுள்ளன.