ஹைதராபாத் நகரின் புவியியல் அமைப்பு மற்றும் வரலாற்றுப்பின்னணியில் ஒரு முக்கிய அடையாளமாக இந்த ஹுசேன் சாகர் ஏரி அறியப்படுகிறது. மனித முயற்சியில் உருவான ஏரிகளுள் ஒன்றான இது 1562ம் ஆண்டு ஹஸரத் ஹுசைன் ஷா வாலி என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.
மூசி ஆற்றின் துணை ஆறு ஒன்றின் பாதையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏரி நகருக்கான நீர்த்தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், பாசன வசதிகளுக்காகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
எப்போதும் வற்றாத நீர்த்தேக்கத்துடன் காட்சியளிக்கும் இந்த பிரம்மாண்ட ஏரி ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் இரண்டையும் இணைப்பது போன்று காட்சியளிக்கிறது. ஏரியை சுற்றிலும் ‘நெக்லஸ் ரோடு’ எனும் பிரசித்தமான வீதி அமைந்துள்ளது.
மாலை நேரத்தில் இந்த தெரு தன் பெயருக்கேற்றாற்போலவே கழுத்துநகையில் பதிக்கப்பட்ட வைரக்கற்கள் போன்று ஒளிரும் விளக்குகளால் உயிர்பெறுகிறது. நடுவில் ஹுசேன் சாகர் ஏரி வீற்றிருக்க வரிசையான விளக்குகளால் இரவுநேரத்தில் ஜொலிக்கும் ‘நெக்லஸ் ரோடு’ பார்வையாளர்களை பிரமிக்க செய்துவிடுகிறது.
1992ம் ஆண்டில் ஒரு பிரம்மாண்டமான புத்தர் சிலை (ஒரே கல்லால் ஆனது) இந்த ஏரியின் நடுவே நிர்மாணிக்கப்பட்டது. இந்த சிலையை ஆரம்பத்தில் ஏரிக்கு நடுவே நிர்மாணிக்க எடுத்துச் செல்லும் போது தவறி ஏரியில் விழுந்துவிட்டது.
அதன் பிறகு இரண்டு வருட கடும் போராட்டத்துக்கு பின் இந்த சிலை ஏரியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு ஏரிக்கு நடுவே தளம் அமைக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. இச்சிலை அமைந்திருக்கும் திட்டுப்பகுதிக்கு படகு மூலம் பயணிகள் செல்லலாம்.
சுற்றிலும் பல முக்கியமான சுற்றுலா அம்சங்கள் அமைந்திருப்பதோடு ஹைதராபாத்தில் பயணிகள் தவறவிட முடியாத ஒரு விசேஷ சுற்றுலா அம்சமாக இந்த ஹுசேன் சாகர் ஏரி வீற்றிருக்கிறது.