ஹைதராபாத் நகரிலுள்ள இந்த ஓஸ்மான் சாகர் ஏரி உள்ளூர் மக்களால் கண்டிபேட் என்றும் அழைக்கப்படுகிறது. ஹுசேன் சாகர் ஏரியை போன்றே மற்றுமொரு செயற்கை ஏரியான இது மூஸி ஆற்றில் ஒரு அணையை கட்டும்போது உருவாக்கப்பட்டுள்ளது.
1920ம் ஆண்டில் உருவான நாள் முதல் இந்த ஏரி ஹைதராபாத் நகரம் மற்றும் சுற்றியுள்ள நகரங்களுக்கான நீராதாரமாக விளங்கி வருகிறது. வெள்ளப்பெருக்கிலிருந்தும் இப்பகுதியை ஓஸ்மான் சாகர் ஏரி பாதுகாத்துவருகிறது.
இந்த ஏரி உருவாவதற்கு முன்னர் 1908ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெரும் வெள்ளப்பெருக்கில் ஹைதரபாத் நகரம் முழுவதுமே பெரும் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
ஹைதரபாத் நகரத்தின் கடைசி நிஜாம் மன்னரான ஓஸ்மான் அலி கான் என்பவரது ஆட்சியில் கட்டப்பட்டதால் இந்த ஏரிக்கு அவரது பெயரே வைக்கப்பட்டுள்ளது. ஏரியை நோக்கியவாறு கட்டப்பட்டிருக்கும் ஒரு அரண்மனை மாளிகை சாகர் மஹால் என்று அழைக்கப்படுகிறது.
நிஜாம் மன்னர் ஓஸ்மான் அலி கான் இந்த மாளிகையை கோடை ஓய்வு மாளிகையாக பயன்படுத்தியுள்ளார். அழகிய ஏரிப்பகுதியை ரசிக்க உதவும் பாரம்பரிய நினைவுச்சின்னமாக இந்த மாளிகை வீற்றுள்ளதோடு தற்போது ஒரு சொகுசு ரிசார்ட் விடுதியாகவும் இது இயங்குகிறது.