ஷில்பராமம் என்பது மிகப்பிரசித்தமான ஒரு ஓவிய-சிற்ப-கைவினைக்கலை கிராமம் ஆகும். இது மாதப்பூர் ஹைடெக் சிட்டிக்கு அருகிலேயே அமைந்துள்ளது. ஹைதராபாத் நகரிலிருது 20 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கலைக்கிராமம் ஓவியம் மற்றும் சிற்பக்கலையை பேணவும் கைவினைத்தொழில் நுணுக்கங்களை வளர்க்கவும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பாரம்பரிய கலையம்சங்களை மட்டுமல்லாமல் எல்லா மாநில கலை மரபுகளையும் பேணும் பரந்த நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய கைவினைப்பாரம்பரிய மரபுகளை காப்பாற்றி ஆதரிக்கும் நோக்கத்துடன் வருடந்தோறும் இங்கு பாரம்பரிய திருவிழாக்கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
1992ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த கலைக்கிராமம் இங்கு நடத்தப்படும் திருவிழாகண்காட்சிகள் மூலம் நாடு முழுவதும் அறியப்படும் புகழை பெற்றுள்ளது. இந்த திருவிழாக்கண்காட்சிகளின்போது பார்வையாளர்களுக்கு அற்புதமான இந்திய கைவினைப்பொருட்களை பார்க்கவும் வாங்கவும் வாய்ப்பு கிடைப்பதோடு, இது போன்ற பாரம்பரிய கலையம்சங்கள் அழிந்துபோகாமல் இருக்க உதவுவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
பாரம்பரிய ஆபரணங்கள், தையல் வேலைப்பாடு செய்யப்பட்ட உடைகள், கையால் செதுக்கப்பட்ட பல்வேறு மர அலங்கார பொருட்கள் மற்றும் அறைகலன்கள் போன்றவற்றை இந்த கலைக்கிராமத்தில் பயணிகள் வாங்கலாம். பசுமையான புல்வெளிகளை கொண்டிருக்கும் இந்த கலைக்கிராமத்தை பார்த்து ரசிப்பதும் மனதுக்கு சாந்தியளிக்கும் ஒரு இனிய அனுபவமாகும்.