அருணாச்சலபிரதேஷ் மாநிலத்திலுள்ள எட்டு சரணாலயங்களில் இந்த இட்டாநகர் காட்டுயிர் சரணாலயமும் ஒன்றாகும். பபும்பரே மாவட்டத்தில் உள்ள இது 140.30 ச.கி.மீ பரப்பளவில் பரந்து அமைந்துள்ளது.
பன்முகத்தன்மை கொண்ட பருவநிலை மற்றும் இட அமைப்பை கொண்டிருப்பதால் இங்கு ஏராளமான தாவர வகைகள் மற்றும் உயிரினங்கள் நிரம்பியுள்ளன. இந்த சரணாலயத்தை ஒட்டியே குடியிருப்புப்பகுதிகளும் அமைந்துள்ளன. சரணாலயத்தை காக்கும் பொறுப்பு இவற்றில் வசிக்கும் மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இட்டாநகர் காட்டுயிர் சரணாலயம் முன்பு ஈடாநகர் வனப்பகுதி என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. இதன் தென்பகுதியில் பச்சின் ஆறு, வடகிழக்கில் நேவ்ரோச்சி ஆறு, கிழக்கில் பாம் ஆறு மற்றும் வடக்கே சிங்கே ஒடை ஆகியவை பாய்கின்றன.
அடர்ந்த தாவரச்செழிப்பை கொண்டுள்ள இந்த சரணாலத்தில் சம்பார் மான், யானைக்கூட்டங்கள், குரைக்கும் மான், கரடி, புலி மற்றும் சிறுத்தை போன்றவை வசிக்கின்றன.
பலவகையான பறவைகளும் இந்த வனப்பகுதியை இருப்பிடமாக கொண்டுள்ளன. வண்ணமயமான ஆர்க்கிட் மலர்கள் இந்த காட்டுப்பகுதியின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
துருதிருஷ்டவசமாக விரிவாக்கம் செய்யப்படும் குடியிருப்புகள் காரணமாக இந்த காட்டு வளம் குறைந்துகொண்டே வருகிறது. இதன் காரணமாக அருணாச்சலபிரதேஷ் மாநிலத்தின் அரசாங்கப்பறவையான இருவாட்சியின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.
இதற்கு முன்னர் இந்த பறவையின் எண்ணிக்கை கணிசமாக காடு முழுவதும் விரவியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இருவாட்சி பறவையை சரணாலயத்தின் கிழக்கு மற்றும் வடக்குப்பகுதியில் மட்டுமே காண முடிகிறது.
இட்டாநகர் காட்டுயிர் சரணாலயத்தின் தாவரச்செழிப்பு ஒரு தனித்தன்மையான அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. இங்கு ஈரமான பசுமைமாறாக்காடுகளும், வெப்பமண்டல மித பசுமைமாறாக்காடுகளும் நிரம்பியுள்ளன.
இவற்றில் எல்லாவகையான தாவர இனங்களும் காணப்படுகின்றன. பள்ளத்தாக்குகள் மற்றும் மலையடிவாரங்கள் மட்டுமல்லாது இந்த சரணாலயம் முழுதுமே மலைப்பாங்கான பிரதேசமாக அமைந்துள்ளதால் மூங்கில் தோப்புகள் இங்கு அதிகம் உருவாகியுள்ளன.