பொதுவாக அருங்காட்சியகங்கள் என்பவை அறிவியல், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாறு தொடர்பான அரும்பொருட்களை பாதுகாத்து காட்சிப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அருணாச்சலபிரதேஷ் மாநிலத்தின் தலைநகரான இட்டாநகரிலும் இது போன்று உருவாக்கப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகம்தான் ஜவஹர்லால் நேரு மியூசியம்.
1980ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மியூசியத்தில் இம்மாநிலத்துக்குரிய பழங்குடி கைவினைப்பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள அரும்பொருட்களை பார்ப்பதன் மூலம் இம்மாநிலத்தின் ஆழமான பாரம்பரியம் குறித்து தெரிந்துகொள்வது மிக எளிதாக இருக்கும்.
துணிவகைகள், ஆயுதங்கள், ஆபரணங்கள், தலைப்பாகைகள், இசைக்கருவிகள் மற்றும் கைவினப்பொருட்கள் ஆகியவை இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
வித்தியாசமான பொருட்களை காட்சிக்கு கொண்டிருப்பதால் இது உலகம் முழுதும் பிரசித்தமாக அறியப்படுகிறது. மரவேலைப்பாடுகளை கொண்ட அழகு பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் போன்றவை இங்குள்ள சுவாரசிய அம்சங்களாக ரசிக்கப்படுகின்றன.
இதே வளாகத்தில் கைவினைத்தொழில் மையத்தின் மூலமாக பிரம்புப்பொருள் தயாரிப்பு குறித்த ஒரு பயிற்சிப்பட்டறையும் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அரிய நூல்களைக்கொண்ட ஒரு நூலகம் ஒன்றையும் இந்த அருங்காட்சியகம் கொண்டுள்ளது.
அருங்காட்சியக வளாகத்தின் வாசலில் ஜவஹர்லால் நேரு அவர்களில் மார்பளவுச்சிலை ஒன்று பார்வையாளர்களை வரவேற்கிறது. தரைத்தளப்பகுதியில் இசைக்கருவிகள், பாரம்பரிய கலைப்பொருட்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் மதச்சடங்கு தொடர்பான பொருட்கள் போன்றவை வைக்கப்பட்டிருக்கின்றன.
கைவினைப்பொருட்கள் யாவுமே மரத்தால் மற்றும் பிரம்பு பொருட்களால் ஆனவையாக காணப்படுகின்றன. முதல் தளத்தில் இட்டா கோட்டை ஸ்தலம் மற்றும் மலினித்தன், நோக்ஸ்பர்பாட் ஆகிய இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட வரலாற்றுபொருட்கள் இடம் பெற்றுள்ளன.
சுற்றுலாப்பயணிகள் ஞாபகார்த்தப்பொருட்களை வாங்குவதற்கென ஒரு கைவினைப்பொருள் அங்காடியும் இந்த வளாகத்தில் உள்ளே அமைக்கப்பட்டிருக்கிறது.
அருணாச்சல பிரதேசத்திலிருந்து முதல் முறையாக எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறிய தபி மிரா பயன்படுத்திய மலையேற்ற உபகரணங்கள் யாவும் இந்த அருங்காட்சியகத்தில் ஒரு முக்கிய அம்சமாக காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.