இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் எல்லையில், ஜெயின்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம் தான் தாவ்கி. இந்த இடத்தின் வழியாகத்தான் இந்தியாவிலிருந்து பங்களாதேஷ் நாட்டிற்கு நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. சீசன் உச்சத்தில் இருக்கும் போது, ஒரு நாளைக்கு சுமார் 500 வண்டிகளுக்கும் மேலாக நிலக்கரி கொண்டு செல்லப்படும்.
தாவ்கியில் உள்ள ஊம்ங்கோ ஆற்றின் ஊம்ஸியம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வருடாந்திர படகு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஊம்ங்கோ ஆறு ஜெயின்டியா மலைகள் மற்றும் காசி மலைகளின் இயற்கையான எல்லையாக உள்ளது. இந்த இரு நகரங்களையும் இணைக்கும் வகையில், 1932-ம் ஆண்டில் பிரிட்டிஷார் ஒரு பெரிய தொங்கு பாலத்தை அமைத்துள்ளனர்.
ஷில்லாங்கின் பாரா பஜார் பகுதியிலிருந்து காலை நேர பேருந்துகள் மற்றும் பிற போக்குவரத்து வசதிகள் தாவ்கி எல்லைப் பகுதி வரையிலும் கிடைக்கின்றன.
சுற்றுலாப் பயணிகள் தனியான சுற்றுலாப் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து வசதியான மற்றும் மகிழ்ச்சியான பயணத்தை செய்ய முடியும். அதே நேரம், இங்கிருக்கும் டாமாபில் பேருந்து நிலையத்திலிருந்து, பங்களாதேஷின் சில்கெட்டிற்கு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.