இமயமலையின் மடியில் வீற்றிருக்கும் ஜம்மு காஷ்மீர் தன் இயற்கை அழகிற்காக உள்நாட்டிலும் உலகம் முழுவதிலும் அறியப்படும் மாநிலமாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் ஜம்மு ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கிய ஜம்மு காஷ்மீர் ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுடன் தன் எல்லையை பகிர்ந்துகொண்டுள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீருக்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். இயற்கை ஆர்வலர்களையும், சாகசப் பிரியர்களையும் ஒருங்கே மகிழ்விக்கும் இடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது.
புகழ்பெற்ற முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் ஜம்மு காஷ்மீரின் அழகில் மயங்கி, பூமியில் சொர்கம் உண்டென்றால் அது இங்குதான் உள்ளது என வர்ணித்தார். பிரம்மாண்டமான மலைத் தொடர்கள், பளிங்கு போன்ற தெளிவான ஓடைகள் கோவில்கள், பனிப்பாறைகள் மற்றும் தோட்டங்கள் ஜம்மு காஷ்மீரின் அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளன.
வானிலை
வருடம் முழுவதும் ஜம்மு காஷ்மீரை சுற்றிப் பார்க்கலாம் என்றாலும் மார்ச் முதல் அக்டோபர் வரையில் பயணப்படுவதே உகந்ததாக கருதப்படுகிறது. இம்மாதங்களில் நிலவும் மிதமான தட்பவெட்ப நிலை சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்றவாறு இருக்கிறது.
குளிர்கால விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்கள் பனி சூழ்ந்திருக்கும் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை இங்கு வரலாம். செப்டம்பர் முதல் மார்ச் வரை சூடான பருவநிலை நிலவுவதால் அந்த பருவமும் சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.
லடாக் பகுதி குளிர்காலங்களில் மிகவும் குளிராக இருப்பதால் அப்பகுதியை கோடைகாலத்தில் சுற்றிப் பார்ப்பதே உகந்தது.
மொழிகள்
ஜம்மு காஷ்மீரின் அதிகாரபூர்வ மொழி பெர்ஷிய எழுத்துக்களால் எழுதப்படும் உருது ஆகும். மாநிலம் முழுதும் உருது பேசப்பட்டாலும் காஷ்மீர் பகுதியில் அதிகமாக பேசப்படுகிறது. மேலும் காஷ்மிரி, டோக்ரா, பால்டி, பஹரி, கோஜ்ரி, ஷினா, பாஷ்தோ லடாக்கி ஆகிய மொழிகளும் இங்கு பேசப்படுகின்றன.
இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக கருதப்படும் ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகராக ஸ்ரீநகரும், குளிர்கால தலைநகராக ஜம்முவும் விளங்குகின்றன.
பிர் பஞ்சால் மலைத் தொடருக்கும் இமயமலைகளுக்கும் இடையே அமைந்திருப்பதால் சாகசப் பிரியர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும், புனிதப் பயணிகளுக்கும் ஜம்மு காஷ்மீரில் ஏராளமாக ஸ்தலங்கள் இருக்கின்றன.
கலைப்பிரியர்களால் விரும்பப்படும் அமர் மஹால் அருங்காட்சியகமும், டோக்ரா அருங்காட்சியகமும் ஜம்முவின் முக்கியமான அருங்காட்சியகங்களாகும்.
வைஷ்ணோ தேவி, தர்கா கரிப் ஷா, பாஹு கோவில், ஜியாரத் பாபா புதான் ஷா, ஷிவ் கோரி, பீர் கோஹ் குகை கோவில் ஆகியவை இங்கிருக்கும் புகழ்பெற்ற மத ஸ்தலங்களாகும்.
தெளிவான நீல நிற நீர்நிலைகள், மலைகள், ஏரிகள், மிதமான தட்பவெட்பநிலை ஆகியவை காஷ்மீர் பள்ளத்தாக்கின் சிறப்பம்சங்களாகும். ஆப்பிள் மற்றும் செர்ரி தோட்டங்கள், ஷிகாரா சவாரி, கொண்டோலா சவாரி, காஷ்மீர் கைவினைப் பொருட்கள் ஆகியவை காஷ்மீரின் தனிச்சிறப்புகளாகும்.
அதுமட்டுமல்லாது ஹஜ்ரத்பல் மசூதி, ஜம்மா மஸ்ஜித், சரர்-ஈ-ஷரிஃஃப், கீர் பவானி கோவில், மார்தான்ட் சூரிய கோவில் சங்கராச்சார்யா கோவில் ஆகிய மத ஸ்தலங்களும் ஏராளமாக அமைந்துள்ளது.
மேலும் நிஷத் தோட்டம், ஷாலிமார் தோட்டம், சஷ்ம்-ஈ-ஷாஹி ஆகிய மொகல் தோட்டங்களையும் பயணிகள் கண்டுகளிக்கலாம்.பஹல்காம், சோனாமார்க், பாட்னிடாப், த்ராஸ், குல்மார்க், கார்கில் ஆகிய இடங்கள் தங்கள் இயற்கை அழகிற்காக புகழ்பெற்றவை. தால் ஏரி மற்றும் நாகின் ஏரி ஆகியவை இப்பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற ஏரிகளாகும்.
மேலும் இங்கிருக்கும் தச்சிகம் வனவிலங்கு சரணாலயம், குல்மார்க் உயிரிகோளம், ஹெமிஸ் வனவிலங்கு பூங்கா, ஓவெரா தேசியப் பூங்கா ஆகியவை இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்குகின்றன.
சாகசப் பிரியர்களுக்கு பிடித்தமான மலையேற்றம், படகு சவாரி மட்டுமல்லாது பனிச்சறுக்கு போன்ற குளிர்கால விளையாட்டுகளிலும் இங்கு ஈடுபடலாம். பாட்னிடாப், குல்மார்க், க்ரிம்சி மற்றும் கிஷ்த்வார் ஆகிய இடங்கள் சாகச விளையாட்டுகளுக்கு புகழ்பெற்ற இடங்களாகும்.
பழங்கால கட்டிடங்கள், அரண்மனைகள் மற்றும் மலையேற்றத்திற்காக லடாக் பகுதி புகழ்பெற்று விளங்குகிறது. சர்ச்சைக்குரிய பாங்காக் ஏரி அமைந்திருக்கும் லடாக், கலாசாரத்திற்காகவும், மாற்றம் செய்யப்படாத இயற்கை அழகிற்காகவும் போற்றப்படுகிறது.