ஷாஹி பிரிட்ஜ், அக்பரி பிரிட்ஜ், முனீம் கான் பிரிட்ஜ் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த பாலமானது ஜௌன்பூரை அக்பரின் ஆளுநராக இருந்து ஆண்ட முனிம் கான் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.
அப்சல் அலி எனும் ஆப்கானிய கட்டிடக்கலை நிபுணரால் வடிவமைக்கப்பட்ட இந்த பாலம் கோமதி ஆற்றின் குறுக்கே 1568-1569ம் ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கிறது. தற்போது ஜௌன்பூரில் முகலாயர் கால கட்டிடக்கலையின் முக்கிய சான்றாக இந்த புராதனமான பாலம் வீற்றுள்ளது.
ஒரு வித்தியாசமான கட்டிடக்கலை படைப்பான இந்த பாலம் அரண்மனை வாயில்களில் காணப்படும் பிரம்மாண்ட விதானவளைவுக்கூரை போன்ற தூண் அமைப்புகளின் தொகுப்பு பாலமாக அமைந்திருக்கிறது.
நேரில் இதைப்பார்க்கும்போது இப்படி ஒரு பாலத்தை கற்பனை செய்ய முடிந்த அந்த கலைஞனின் திறமையை நம்மால் வியக்காமல் இருக்க முடியாது. அதுமட்டுமல்ல, சீர்மை கெடாத கட்டுமான நேர்த்தி இன்று நவீன சாதனங்களுடன் எழுப்பப்படும் கட்டிடங்களுக்கே சவால் விடும்படியாக இந்த புராதன பாலத்தில் ஒளிர்கிறது.
காலத்தின் சீற்றம் சிண்டிப்பார்க்காத இதன் வலிமையும் வியப்புக்குரியது. பாலத்தில் இருபுறமும் கலையம்சத்துடன் கூடிய காட்சி மாடங்கள் நுணுக்கமான அலங்கார அம்சங்களுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.
தூண்கள் அமைந்திருக்கும் கோணம், அவற்றின் பிரம்மாண்ட பருமன் போன்றவை இதனை வடிவமைத்த கலைஞர்களின் ஆழமான அறிவியல் தொழில் நுட்ப அறிவை புலப்படுத்துகின்றன. இன்றும் இந்த பாலம் முழுமையாக போக்குவரத்திற்கு பயன்படுகிறது என்பது மிக வியப்புக்குரிய ஒன்றாகும்
ஜௌன்பூரிலிருந்து 1.7 கி.மீ தூரத்திலுள்ள இந்த பாலம் இந்தியாவிலுள்ள வரலாற்று ஆர்வலர்கள், கட்டிடக்கலை ரசிகர்கள், ஆராய்ச்சியாளர்கள், வடிவமைப்புக்கலை மாணவர்கள் போன்றோர் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.
முகலாயர் கலை பாரசீகக்கலை இந்துக்கலை எனும் வரையறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இன்றைக்கு சுமார் 440 வருடங்களுக்கு முன்னால் இப்படி ஒரு கட்டுமானம் இம்மண்ணில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே ஒரு பெருமைக்குரிய விஷயமாகும்.