இவ்வருங்காட்சியகத்தின் தற்போதைய இயக்குனராக பதவி வகித்து வரும் சுவாமி ஓமானந்த் சரஸ்வதி அவர்களால் 1959 ஆம் வருடம், ஜஜ்ஜாரில் நிறுவப்பட்ட குருகுல் தொல்பொருளியல் அருங்காட்சியகம், ஹரியானாவின் மிகப்பெரும் அருங்காட்சியகமாக வளர்ந்து நிற்கிறது.
இந்த அருங்காட்சியகத்தின் நிறுவனருடைய மனம் தளராத முயற்சியினால் பல்வேறு கலைப்பொக்கிஷங்கள் அடங்கிய தொகுப்பை இது பெற்றுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், அலஹாபாத் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பரேலி போன்ற நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் நாணயங்களின் பெரும் அணிவகுப்பைக் காணலாம்.
இங்கு ராமபிரான் காலத்தைச் சேர்ந்த பல்வேறு பெரிய மற்றும் சிறிய அளவிலான சிலைகள் பலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, சீதையைக் கடத்த இராவணன் உருமாற்றம் செய்து கொண்டதாகக் கூறப்படும் பஞ்சவதி என்ற மானின் சிலை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மஹாபாரத காலத்தை சித்தரிக்கும் பல்வேறு காட்சிப்பொருள்களையும் இங்கு காணலாம். உதாரணத்திற்கு, அபிமன்யூ மாட்டிக்கொண்டு, உயிரிழந்ததாகக் கூறப்படும் சக்கரவியூகத்தின் ஓவியம் ஒன்று இங்கு உள்ளது. சதுரங்கப் பலகையின் ஓவியம் ஒன்றும் காணப்படுகிறது.
நம்புதற்கரிய பல்வேறு சுவாரஸ்யமான பொருட்களை இங்கு காண முடிகிறது. உதாரணமாக, ஒட்டகத் தோலில் செய்யப்பட்ட நீல்கிரியின் பீப்பாய்கள், இணைப்புகளற்ற ஒரு சங்கிலி, ஒரு புட்டியினுள் அடைக்கப்பட்ட விவசாயக் கருவிகளின் நுண்ணிய வடிவங்கள் மற்றும் கலியானா மலைகளிலிருந்து கொண்டு வரப்பட்ட, எளிதாக வளைந்து கொடுக்கக்கூடிய கல், போன்ற அரிய பல பொருட்கள் இங்கு உள்ளன.
ஏராளமான புராதன நாணயங்கள் கண்ணாடிப் பேழைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் நேபால், ஸ்ரீலங்கா, பூட்டான், பாகிஸ்தான், ஜப்பான், தாய்லாந்து, ரஷ்யா, பர்மா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்தும், இதர பல நாடுகளிலிருந்தும் கொண்டு வரப்பட்டுள்ளன.