ஜான்ஸி மாவட்டத்தின் நகரங்களுள் ஒன்றான பருவா சாகர், ஜான்ஸியிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில், பெட்வா நதியின் கரையோரங்களில் அமைந்துள்ள, பருவா சாகர் என்றழைக்கப்படும் ஒரு அழகான ஏரியைக் கொண்டிருப்பதாலேயே அவ்வாறு வழங்கப்படுகிறது.
ராஜா உதித் சிங் அவர்களால் நிறுவப்பட்டுள்ள இந்நகரம், எண்ணிலடங்கா சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய இயற்கை எழில் கொஞ்சும் ஏராளமான ஸ்தலங்களைக் கொண்டுள்ள பெருமை பெற்றுள்ளது.
ஏரியைத் தவிர்த்து, சரித்திரப் பிரசித்தி பெற்ற பந்தல்கண்ட் கோட்டைக்காகவும் இந்நகரம் புகழ் பெற்றுள்ளது. ஒரு மலையின் மேல் அமைந்திருக்கும் இக்கோட்டையின் புவியியல் அமைப்பு, எதிரிகளிடமிருந்து இந்நகரை பாதுகாப்பது போல் காணப்படுகிறது.
மணற்கல்லால் ஆன இக்கோட்டை, பல மைல் நீளத்திற்குச் செல்லும் பெட்வா நதியின் நீர்த்தேக்கத்தின் அகலப்பரப்பான காட்சிகளை காண்போரின் கண்களுக்கு விருந்தாக்குகின்றது.
இந்நகரம் துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள, ஜராய்-கி-மத் என்று பிரபலமாக அழைக்கப்படும் ஒரு புராதனக் கோயிலின் இருப்பிடமாகவும் திகழ்கிறது. இக்கோயில் கட்டப்பட்டுள்ள பாணியாகிய ப்ரதிஹரா கட்டுமான பாணி, 860 ஏடியைச் சேர்ந்ததாகும். இக்கோயிலின் நான்கு மூலைகளிலும் உள்ள நான்கு சிறு கோயில்கள் இதற்கு அரண் போல் காணப்படுகின்றன.
இக்கோயில் 1928 ஆம் ஆண்டின் இந்திய தொல்பொருள் ஆய்வில், பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக பட்டியலிடப்பட்டுள்ளது.பரிந்துரை: கட்டாயம் பார்க்க வேண்டியது