சரித்திரப் பிரசித்தி பெற்ற ஜான்ஸி கோட்டையில் அமைந்துள்ள ஜான்ஸி அருங்காட்சியகம் இந்நகரின் பிரபல சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. ஆயுதங்கள், மண்பாண்டங்கள், சிலைகள், உடைகள், வெண்கலங்கள், வெள்ளி, தங்கம் மற்றும் செம்பு காசுகள், மற்றும் ஏராளமான சிற்பங்கள் போன்ற பொருட்களின் சிறந்த சேகரிப்புப் பெட்டகமாகக் காட்சியளிக்கிறது இந்த அருங்காட்சியகம்.
இந்த காட்சிப்பொருள்கள் அனைத்தும் சந்தேலா அரசர்களின் வாழ்க்கை மற்றும் காலங்களைப் பற்றியும், இந்நகர் மற்றும் பந்தல்கண்ட் பகுதியின் பழங்கால வரலாறு மற்றும் பண்பாடு ஆகியவற்றையும் எடுத்துக் கூறுவனவாகக் காணப்படுகின்றன.
பழங்கால இந்திய சரித்திரத்தில் ஆர்வமுடைய மாணாக்கர்களுக்கென்றே இங்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஒரு சித்திரக் காட்சிக்கூடத்தில், குப்தா காலத்தைய சித்திரங்களைக் காணலாம்.
1857 ஆம் ஆண்டு நடந்த இந்தியப் புரட்சியை அடக்க ஆங்கிலேயர்கள் உபயோகித்த ஆயுதங்கள், போர்க்கருவிகள் மற்றும் தளவாடங்களின் அணிவகுப்பும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சந்தேலா மற்றும் பந்தேலா காலங்களைச் சேர்ந்த கலைப்பொருட்களுக்கு தனித்தனி பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜான்ஸி ராணி மற்றும் அவரது கூட்டாளிகளான மராட்டிய தளபதிகளால் உபயோகிக்கப்பட்ட ஆயுதங்கள் இங்கு வருவோரின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கின்றன.