மஹாலக்ஷ்மி கோயில் முப்பெரும் தேவியருள் ஒருவரான லக்ஷ்மி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். லக்ஷ்மி தர்வாஜாவுக்கு வெளிப்புறத்தில், லக்ஷ்மி தல்லிற்கு அருகில் உள்ள இந்த அற்புதமான கோயில், 1769 ஆம் ஆண்டில் ஜான்ஸியின் சுபேதாராக விளங்கிய விஷ்வாஸ் ராவ் லக்ஷ்மண் அவர்களின் நீக்கத்தைத் தொடர்ந்து, சுபேதாராக பதவியேற்றுக் கொண்ட ரகுநாத் ராவ் (II) நெவால்கர் அவர்களால் 18 ஆம் நூற்றாண்டில், கட்டப்பட்டுள்ளது.
ஜான்ஸியின் இந்து ஆட்சியாளர்களும், பொதுமக்களும் மஹாலக்ஷ்மி தேவியின் தீவிர பக்தர்களாக இருந்துள்ளனர்.
இக்கோயிலின் பெயருக்கும் ராணி லக்ஷ்மி பாய்க்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை; ஏனெனில், ராணி அவர்கள் ராஜா கங்காதர் ராவை மணப்பதற்கு பல காலம் முன்பே இக்கோயில் கட்டப்பட்டு விட்டது.
மிகச் சிறந்த கலையம்சத்தோடு கட்டப்பட்டுள்ள இக்கோயில், இது கட்டப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை நிகழ்ந்த வரலாற்று மேன்மைகளின் மௌன சாட்சியாகத் திகழ்கிறது.
இக்கோயில், லக்ஷ்மி தேவியின் பக்தர்களுக்கு மட்டுமின்றி வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பலருக்கும் மிக விருப்பமான இடமாக விளங்குவதனால், இங்கு வருடம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.
பண்டிகை காலங்களில், முக்கியமாக மக்கள் தம் வாழ்வில் வளம் பெற வேண்டி லக்ஷ்மி தேவியை வணங்கி பூஜை செய்யும் தீபாவளி சமயத்தில், இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதைக் காணலாம்.