இந்நகரின் ஆட்சியாளராக விளங்கிய மஹாராஜா ருத்ர பிரதாப் சிங் அவர்களால், 1501 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, ஊர்ச்சா என்றும் அழைக்கப்படும் ஓர்ச்சா, திகம்கார் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இந்த ராஜ மாநிலம், மத்தியப்பிரதேசத்தின் பந்தல்கண்ட் பகுதியின் ஒரு அங்கமாக விளங்குகிறது. ஓர்ச்சா, பெட்வா நதிக்கரையில், ஜான்ஸியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலும், திகம்காரிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலும் அமையப்பெற்றுள்ளது.
ஓர்ச்சா கோட்டை என்றழைக்கப்படும் மற்றொரு கோட்டையும் மஹாராஜா அவர்களால் கட்டப்பட்டுள்ளது. ராஜ வம்சத்தின் மற்றொரு அங்கத்தினரான ராணி கணேஷா பாய் அவர்கள் சதுர்புஜ் கோயிலை முகாலயப் பேரரசரான அக்பரின் ஆட்சிக்காலத்தின் போது நிறுவியுள்ளார்.
நகரின் மற்றொரு ஆன்மீக அடையாளமாகத் திகழும் ராஜா மந்திர், மதுகர் ஷா அவர்களால் 1554 முதல் 1591 வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்கிறது.
பெட்வா நதியால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பருவகால தீவானது, பீரங்கிப்படைப் பாதுகாப்புடன் கூடிய சுவர்களால் சூழப்பட்டுள்ள ஒரு அரண்மனைக் கோட்டையின் இருப்பிடமாகவும் உள்ளது.
மஹாராஜா பிர் சிங் தியோ அவர்கள் தன் ஆட்சிக்காலத்தின் வெவ்வேறு காலகட்டங்களின் போது கட்டிய பல்வேறு கட்டிடங்களும் இக்கோட்டையில் காணப்படுகின்றன. இக்கட்டிடங்களின் தனித்தன்மை யாதெனில் இவை யாவும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.
சாத்ரிகள் என்றழைக்கப்படும், சமாதியின் மேல் அல்லாமல் வேறிடத்தில் அமைக்கக்கூடிய நினைவிடங்கள் பலவும் பெட்வா நதிக்கரையில், கோட்டைக்கு அருகே காணப்படுகின்றன.