அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்றாகவும், வடக்கு அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து பகுதிகளுக்கு செல்லும் நுழைவாயிலாகவும் இருக்கும் ஜோர்கட் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். இரண்டு என்று பொருள்படும் 'ஜோர்' மற்றும் சந்தை என்று பொருள்படும் 'கட்' என்ற வார்த்தையில் இருந்தும் ஜோர்கட் என்ற பெயர் வந்திருக்கிறது.
18-ம் நூற்றாண்டில் பாக்தோய் ஆற்றின் இரு கரைகளிலும் இருந்த சௌகிகட் மற்றும் மாச்சார்கட் என்ற பெயர்களில் புகழ் பெற்று விளங்கிய சந்தைகளே இந்த பெயரால் குறிப்பிடப்பட்டு வருகின்றன.
அஹோம் அரசர்களின் தலைநகரமாக இருந்த பெருமையையும் ஜோர்கட் நகரம் பெற்றிருக்கிறது. எனவே தான் அந்த காலத்தில் அஹோம் அரசர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு வரலாற்று சின்னங்கள் இந்நகரத்தில் காணப்படுகின்றன.
ஜோர்கட் சுற்றுலாவும், தேயிலை எஸ்டேட்களும்!
ஜோர்கட் நகரம் அதன் தேயிலை தோட்டங்களுக்காக மிகவும் அறியப்படும் நகரமாகும். ஜோர்கட் நகரத்தைச் சுற்றிலும் சுமார் 135 தேயிலை தோட்டங்கள் உள்ளன.
இந்த தோட்டங்களால் ஜோர்கட் நகரம் அதிகளவு தேயிலை உற்பத்தி செய்யும் நகரமாக மட்டுமல்லாமல், அவற்றின் பின்னணியில் ஒரு வரலாறை கொண்ட இடமாகவும் உள்ளது.
சின்னமோரா தேயிலை எஸ்டேட் போன்ற தேயிலை தோட்டங்களுக்கு சென்று வராமல் ஜோர்கட் சுற்றுலா முடிவுக்கு வராது. உலகத்திலேயே மிகவும் பழமையான டோக்லாய் தேயிலை ஆராய்ச்சி மையம் அமைந்திருப்பதாலும் ஜோர்கட் நகரின் எழில் அதிகரித்திருக்கிறது.
ஜோர்கட்டில் உள்ள ஆர்வமூட்டக்கூடிய சுற்றுலாத் தலங்கள்
மைய்தாம்ஸ் என்ற கல்லறைகளை பற்றி குறிப்பிடாவிட்டால் ஜோர்கட் சுற்றுலா முழுமையடையாது. ராஜா மைய்தாம் மற்றும் லசிட் போர்புகான் மைய்தாம் ஆகிய கல்லறைகள் ஜோர்கட்-ன் கலாச்சார சிறப்புகளை பறைசாற்றிக் கொண்டு உள்ளன.
புக்ரிஸ் என்ற குளங்களும் இந்நகரத்தின் அழகை கூட்டியுள்ள இடங்களாக உள்ளன. குன்வோரி புக்ரி, பாடுலி புக்ரி ஆகிய சில புக்ரிக்கள் ஜோர்கட் நகரத்தைச் சுற்றிலும் உள்ளன.
அஸ்ஸாம் மாநிலத்தின் கலாச்சார தலைநகரம் ஜோர்கட்
ஜோர்கட் நகரம் வளமான கலாச்சார மையமாக உள்ளது. இந்த சிறுநகரம் இசை மற்றும் இலக்கியங்களால் அஹோம் கலாச்சாரத்தை சீராட்டி வைத்துள்ள இடமாகும்.
அஹோம் கலாச்சாரத்தை பாதுகாத்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், அதனுடன் நவீனத்தையும் சற்றே கலந்து வைத்துள்ளது ஜோர்கட் நகரம். அஹோம் அரசின் கடைசி தலைநகரமாக இருந்த இந்நகரம், பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டங்களின் தலைநகரமாகவும் இருந்த இடமாகும்.
பல்வேறு சிறந்த இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களை உருவாக்கியதன் மூலம் கலாச்சாரத்திற்கான தனது பங்களிப்பை தொடர்ச்சியாக மற்றும் சிறப்பாக ஜோர்கட் செய்து வந்திருக்கிறது.
இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிகப்பெரிய ஞான பீட விருதினை பெற்ற முதல் அஸ்ஸாமிய எழுத்தாளரான பிரேந்த்ரா குமார் பட்டாச்சார்யா ஜோர்கட் நகரத்தைச் சார்ந்தவரே! சிறந்த கல்வியியலாளரான கிருஷ்ண காந்தா ஹான்டிக்கும் ஜோர்கட் நகரத்தவர் தான்.
ஜோர்கட் நகரத்தை அடையும் வழிகள்
தேசிய நெடுஞ்சாலைகள், இரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களின் மூலமாக அஸ்ஸாமின் பிற பகுதிகளுடனும், நாட்டின் பிற பகுதிகளுடனும் ஜோர்கட் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
ஜோர்கட் பருவநிலை
அரைகுறை-மழைக்கால பருவநிலை நிலவுவதால் கோடைக்காலங்களில் அதிக ஈரப்பதமும் மற்றும் மழைக்காலங்களில் அதீத மழைப்பொழிவையும் பெறும் இடமாக ஜோர்கட் உள்ளது.