ஸ்ரீ கண்ணப்பர் கோயில் காளஹஸ்தி நகரத்தில் ஒரு சிறு மலையின் மீது அமைந்துள்ளது. இந்த கோயிலின் பின்னால் ஒரு பிரசித்தமான கதை சொல்லப்பட்டு வருகிறது. பக்த கண்ணப்பர் என்று அழைக்கப்படும் ஒரு தீவிர சைவ பக்தருக்காக இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்ணப்பர் மஹாபாரத அவதாரமான அர்ஜுனனின் மறு அவதாரமாகவே கருதப்படுகிறார். அர்ஜுனர் தீவிர சிவபக்தர் என்பது மஹாபாரதத்திலேயே நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேடர் குலத்தை சேர்ந்த இந்த கண்ணப்பர் ஆதியில் திண்ணன் என்ற பெயரைக்கொண்டவராவார். வனப்பகுதியில் சிவலிங்கத்தை கண்ட இவர் அதற்கு தொடர்ந்து பூஜைகள் செய்து வரலானார். வேடர் குலத்தை சேர்ந்த காட்டுவாசி என்பதால் வழக்கமான பூஜை மரபுகளை கடைப்பிடிக்காமல் முரட்டு பக்தியுடன் சில வழக்கங்களை இவர் பின்பற்றி வந்தார்.
அருகிலிருந்த ஓடையிலிருந்து தன் வாயால் நீரை முகர்ந்து சிவலிங்கத்தை கழுவுவதற்கு பயன்படுத்தியும், காட்டுப்பன்றியை கொன்று நைவேத்தியமாக படைத்தும், முற்றிலும் ஆகம நெறிமுறைகளுக்கு எதிராக இவர் சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கி வந்தார்.
இதுகுறித்து வெறுப்புற்றிருந்த ஒரு அந்தண அர்ச்சகர் முன் கண்ணப்பரின் பக்தியை நிரூபிப்பதற்காக சிவபெருமானே ஒரு அற்புதத்தை நிகழ்த்தியதாக ஐதீகக்கதைகள் கூறுகின்றன. அதன்படி, ஒரு நாள் சிவபெருமான் தனது சிவலிங்கத்தின் ஒரு கண்ணிலிருந்து ரத்தம் வழியும்படி செய்துள்ளார்.
லிங்கத்திற்கு பூஜை செய்ய வந்த கண்ணப்பர் சிவபெருமானின் கண்ணிலிருந்து ரத்தம் வழிவதை பார்த்து திகைத்து, பல வழியிலும் முயற்சித்து அந்த ரத்தக்கசிவை நிறுத்த முடியாமற்போகவே இறுதியாக தனது ஒரு கண்ணை அம்பினால் தோண்டி லிங்கத்தின் கண்ணில் அப்பியவுடன் ரத்தக்கசிவு நின்றுவிட்டது.
இருப்பினும் லிங்கத்தின் மறுகண்ணிலிருந்தும் ரத்தம் வழியத்தொடங்கியது. இது கண்டு பதறிய கண்ணப்பர் ஒரு காலை தூக்கி லிங்கத்தின் கண்ணில் அடையாளத்துக்கு ஊன்றியபடி தனது மறு கண்ணையும் அம்பினால் தோண்டிட முயன்றார். அப்போது சிவபெருமான் அசரீரியாக ஒலித்து “நில்.
என்னருகிலேயே இரு” என்று ஆட்கொண்டார். இந்த காட்சிகள் யாவையும் கண்ணால் கண்ட அந்தண அர்ச்சகர் கண்ணப்பரின் உண்மை பக்தியை புரிந்து கொண்டதோடு வெளியுலகிற்கும் தான் கண்ட காட்சியை பரப்பினார்.
இப்படியாக இந்த கண்ணப்பர் கோயில் தொடர்பான கதை பிரசித்தமாக சொல்லப்படுகிறது. என்னருகிலேயே இரு என்று சிவபெருமான் சொன்னதால் சிவலிங்கம் இருந்த அந்த இடத்திலேயே கண்ணப்பர் கோயிலும் உருவாகியுள்ளது. இந்த கோயிலுக்கு வருடம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.