ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்திலுள்ள கின்னார் மாவட்டத்திலிருக்கும் சிறிய கிராமம் தான் கல்பா. கடல் மட்டத்திலிருந்து 2758மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கிராமம்தான் முந்தைய காலங்களில் கின்னார் பகுதிகளுக்கு தலைமையிடமாக இருந்தது என்பதை நம்ப முடிகிறதா! அதன்பின், ரெக்காங் பியோ நகரம் இந்த தலைமையிடத்தை பிடித்துள்ளது. மாபெரும் இமயமலையின் மீது கற்களின் மீது ஆர்ப்பரித்து கொண்டு, அழகிய சட்லெஜ் நதி பாயந்தோடுவதை இங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
ஆவணங்களின் படி, மகதத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கல்பா பகுதியானது 6-ம் நூற்றாண்டில் மௌரிய சாம்ராஜ்யத்தின் கீழ் வந்துவிட்டது. மேலும் இந்த கிராமம் அமைந்துள்ள கின்னார் பகுதியை திபெத்தைச் சேர்ந்த குகே அரசாங்கம் 9வது மற்றும் 12வது நூற்றாண்டுகளில் ஆட்சி செய்திருக்கிறது. இவற்றிற்குப் பிறகு, முகலாயப் பேரரசர் அக்பர் இந்த பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கிறார்.
கின்னர் கைலச மலை என்று உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படும் கின்னார் கைலாஷ் மலையானது கல்பாவில் உள்ள முதன்மையான சுற்றுலாதலமாகும். இந்த இடம் உள்ளூர்வாசிகளால் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது.
70மீ உயரத்தில், இந்த மலையின் மீது அமர்ந்துள்ள சிவலிங்கத்தின் சிலை வருடம் முழுவதும் எண்ணற்ற பக்தர்களையும் மற்றும் சுற்றுலாப்பயணிகளையும் ஈர்க்கும் அம்சமாக உள்ளது. கடல் கட்டத்திலிருந்து 8900 அடி உயரத்தில், பஸ்பா நதிக்கரையில் அமைந்திருக்கும் சாங்லா பள்ளத்தாக்கு இங்குள்ள மற்றுமொரு சுற்றுலா தலமாகும்.
கட்டிடக்கலையில் ஆர்வமுள்ள சுற்றுலாப்பயணிகள் கட்டிடக்கலைக்காக புகழ் பெற்ற காம்ரு கோட்டை, நாகா கோவில் மற்றும் சாப்னி ஆகிய இடங்களுக்கு செல்லலாம்.
செழுமையான பாரம்பரியமும், கலாச்சார சிறப்பும் உடைய சைனி கிராமத்திற்கும் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம். கடல் மட்டத்திலிருந்து 2290மீ உயரத்தில் அமைந்திருக்கும் ரெக்காங் பியோ நகரம், கின்னார் கைலாஷ் மலையின் சுற்றுவட்டக் காட்சியை (Panoromic View) நின்ற இடத்திலிருந்தவாறே காட்டும் திறன் பெற்ற இடமாகும்.
ஆப்பிள் பழத்தோட்டங்களிலிருந்து 10 நிமிட நடைபயணத் தொலைவில் உள்ள தற்கொலை முனை இங்குள்ள மற்றுமொரு சுற்றுலாதலமாகும். சாகசத்தை விரும்புபவர்கள் இந்த பகுதியில் மலையேற்றம் செய்வதன் மூலமாக இந்த பகுதியின் இயற்கையழகை மேலும் ரசித்திட முடியும்.
கல்பாவில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அழகாக நெய்யப்பட்ட சால்வைகள் மற்றும் கின்னார் தொப்பிகளை விற்று தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்து மற்றும் பௌத்த மதங்களின் கலாச்சாரங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவதை கல்பா கிராமத்தில் பார்ப்பது உங்களுக்கு ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கும்.
சுற்றுலாப்பயணிகள் வான்வழி, இரயில்வழி மற்றும் சாலை வழியாக கல்பாவிற்கு எளிதில் வர முடியும். விமானம் மூலமாக வர விரும்பும சுற்றுலாபயணிகளுக்கு சிம்லா விமான நிலையம் மிகவும் அருகில் உள்ளதாக இருக்கும்.
276 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் புது டெல்லி, மும்பை மற்றும் குல்லு போன்ற பெரிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் சிம்லா விமான நிலையத்திலிருந்து கல்பா செல்லவதற்கு டாக்ஸிகள் மற்றும் வாடகை கார்களை அமர்த்திக்கொள்ளும் வசதியும் உண்டு.
கல்பா கிராமத்திற்கு மிக அருகில் உள்ள இரயில் நிலையமாக இருக்கும் சிம்லா இரயில் நிலையம் சுமார் 244கிமீ தொலைவில் உள்ளது. முக்கியமான இரயில் நிலையமாக விளங்கும் இது பிற பெரிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
இரயில் நிலையத்திலிருந்து கல்பா செல்வதற்கு டாக்ஸிகள் மற்றும் வாடகை கார்களை அமர்த்திக்கொள்ளலாம். இந்திய-திபெத் நெடுங்சாலையான NH-22 வழியாக வரும் சுற்றுலாப்பயணிகள் போவாரி என்ற இடத்தில் வண்டியை திருப்பி கல்பாவிற்கு வந்து சேரலாம்.
இது மட்டுமல்லாமல் சிம்லா மற்றும் ராம்பூரில் இருந்து கல்பாவிற்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளையும் சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்தலாம். மேலும், கோடைகாலங்களில் மட்டும் திறந்திருக்கும் ரோஹ்டாங் கணவாய் வழியாக வரும் பஸ்களிலும் சுற்றுலாப்பயணிகள் கல்பாவிற்கு வரலாம்.
வெப்பநிலை மிதமாக இருக்கும் கோடைகாலங்களில் கல்பாவிற்கு வருவது சிறந்த பருவநிலையாகும். கோடைகாலங்களில் பதிவு செய்யப்பட்ட மிகவும் குறைந்த வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் ஆகும்.
மழைக்காலங்களில், எப்பொழுது மழை வரும் என்று கணிக்க முடியாத வகையில் மழைப்பொழிவு இருப்பதால், மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உபகரணங்களை சுற்றுலாப்பயணிகள் கொண்டு வருவது நல்லது. -10 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்து போகும் வாய்ப்பு அதிகம் உள்ள குளிர்காலங்களில் சுற்றுலாப்பயணிகள் இங்கு வராமலிருப்பதே நலம்.