கம்ஷேத் என்ற சிறு நகரம் மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற மலைவாசஸ்தலமான லோனாவலாவுக்கும், புனே நகருக்கும் மத்தியிலே அமைந்திருக்கிறது. இந்த நகரம் அதன் பாராகிளைடிங் சங்கங்களுக்காகவும், எழில்மிகு இயற்கை காட்சிகளுக்காகவும் பிரத்யேகமாக அறியப்படுகிறது. இதன் காரணமாக மும்பை மற்றும் புனே நகரில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் தங்கள் வார விடுமுறையை கழிக்க கம்ஷேத் நகருக்கு வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது. அதுமட்டுமில்லாமல் லோனாவலா மற்றும் கண்டாலா, கம்ஷேத் நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. அதோடு மும்பையும், புனேவும் கம்ஷேத்திலிருந்து முறையே 115 மற்றும் 60 கிலோமீட்டரில் அமைந்துள்ளன. எனவே கம்ஷேத் நகரம் பயணிகள் நிரம்பி வழியும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.
ஆகாயத்தை நோக்கிச் செல்வோம்!
வானில் பறக்கின்ற போது ஏற்படும் சிலிர்ப்பூட்டும் அனுபவம் சாகசத்தின் உச்சம் என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக கம்ஷேத்தில் உள்ள பாராகிளைடிங் பள்ளிகளில், பயணிகள் தொழில் முறையாகவோ அல்லது பொழுதுபோக்காகவோ பாராகிளைடிங் விளையாட்டில் ஈடுபட்டு மகிழலாம்.
அதோடு இந்த கிளைடிங் சங்கங்கள், மாணவ பைலட்டுகளுக்கு தங்கும் விடுதியும் ஏற்பாடு செய்து தருவதால் பயணிகள் தங்குமிடம் தேடி வேறு எங்கும் அலைய வேண்டிய அவசியமும் இல்லை.
இந்த பாராகிளைடிங் விளையாட்டுக்கான பருவம் கம்ஷேத்தில், மழைக் காலத்துக்கு பிறகுதான் தொடங்குவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் இந்தக் காலங்களில் காற்றாடி பறக்கவிடும் பருவமும் களைகட்டி இருக்கும்.
இங்கு உள்ள கோபுரக் குன்றிலிருந்துதான் பெரும்பாலான பாராகிளைடர்கள் தங்கள் சாகசத்தை தொடங்குகிறார்கள். அதுவும் நீண்ட நேரம் வானில் பறக்கும் பேரின்பத்தை முழுமையாக அனுபவிக்க, இந்தப் பகுதியில் நிலவும் வானிலையும் அருமையாக துணைபுரிகிறது.
ஆகாயத்தில் பறந்தபடியே பயணிகள் புகழ்பெற்ற பாவ்னா ஏரியின் கவின் தோற்றத்தையும், சுற்றியுள்ள கோயில்களையும் பார்த்து ரசிக்கலாம். இதுதவிர கம்ஷேத்தில் உள்ள விடாவலி ஏரி, கொண்டேஷ்வர் ஆலயம் மற்றும் எண்ணற்ற இயற்கை குகைகளுக்கும் பயணிகள் சென்று பார்க்கலாம்.