லுடு நீர்வீழ்ச்சி புல்பணியிலிருந்து 165 கி.மீ தூரத்தில் உள்ளது. இது கோடாகர் சரணாலய வளாகத்தின் உள்ளே இன்னும் பல சிறிய நீர்வீழ்ச்சிகளோடு சேர்ந்து அமைந்துள்ளது.
இந்த லுடு நீர்வீழ்ச்சியை சுற்றிலும் செழிப்பான, பசுமையான வனப்பகுதியும், பாறைப்பாங்கான மலைகளும் காணப்படுகின்றன. சாலை வசதிகள் சிறப்பாக இல்லாத காரணத்தால் இந்த நீர்வீழ்ச்சியை நோக்கிய பயணம் சற்று சிரமமாகவே இருக்கும்.
இருப்பினும் நீர்வீழ்ச்சியை அடைந்தவுடன் சுற்றிலும் காணக்கிடைக்கும் எழிற்காட்சிகள் இந்த சிரமத்தை மறக்கடித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. நீர்வீழ்ச்சியை ஒட்டி சால் மரங்கள் அதிகமாக வளர்ந்து காணப்படுகின்றன.
கோடாகர் சரணாலயத்தில் பழங்குடி மக்களின் வசிப்பிடங்களான குடிசைகளையும் பயணிகள் நேரில் பார்க்கலாம். நகரச்சந்தடிகள் மற்றும் பரபரப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அமைதி மற்றும் இயற்கை வாசனையுடன் வீற்றிருக்கும் இந்த எழிற்பிரதேசம் பயணிகளின் மனக்கசடுகளை துடைத்து எறியும் வல்லமையுடன் வீற்றிருக்கிறது.
பொழுது போக்க எதுவுமே தேவைப்படாமல் சும்மா இயற்கையை ரசித்து கொண்டிருந்தாலே மனம் லேசாகி ஆழ்ந்த அமைதியை அடைவதை இங்கு உணர முடியும். புகைப்பட ரசிகர்கள் கட்டாயம் விஜயம் செய்யவேண்டிய இயற்கை சொர்க்கம் இந்த லுடு நீர்வீழ்ச்சி என்பதிலும் சந்தேகமில்லை.